
காசோலைகளில் எந்தெந்த நிறப் பேனாக்களைப் பயன்படுத்தலாம், பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டிருப்பதாக வரும் தகவல்கள் போலியானவை என்று தெரிய வந்துள்ளது.
முன்னதாக புரளிகள் அதிக வேகத்துடன் பரவும் சமூக வலைதளங்களில், காசோலைகளில் கருப்பு நிற பேனாவில் கையெழுத்திடக் கூடாது என்று ஆர்பிஐ தடை விதித்திருப்பதாக ஒரு தகவல் பரவி வந்தது.
ஆனால், இந்த தகவல் முற்றிலும் பொய்யானது, உண்மையல்ல என்று பிஐபியின் உண்மை அறியும் பிரிவு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
காசோலைகளில், எந்த நிறப் பேனாவில் எழுத வேண்டும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி எந்த வழிகாட்டு நெறிமுறையையும் உருவாக்கி வெளியிடவில்லை என்றும், இது அடிப்படை ஆதாரமற்ற தகவல், இதனை புறந்தள்ளுமாறு மக்களை கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எந்த நிறப் பேனாவில் எழுதலாம்?
வழக்கமாக, வங்கி காசோலைகளில் நீலம் மற்றும் கருப்பு நிறப் பேனாவில் எழுதலாம் என்பதே பொதுவான விதி.
பொதுவாக வங்கிகளின் தரப்பில் ஏதேனும் திருத்தங்களை செய்யவே சிவப்பு நிற இங்க் பயன்படுத்தப்படுவதால், அதனை மக்கள் காசோலைகளில் பயன்படுத்துவதைத் தவிர்த்து விட வேண்டும் என்றும், பென்சில் மற்றும் அழிக்கக் கூடிய இங்க் பயன்படுத்த மட்டுமே இதுவரை தடை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தவிர்த்து, பச்சை, ஊதா நிறப் பேனாக்களை மக்கள் பயன்படுத்துவதில் இருந்து தடை இருக்கிறது. இந்த நிறங்களை சில வேளைகளில் வங்கி ஸ்கேன்னிங் இயந்திரங்களால் படிக்க இயலாமல் போகும்போது பிரச்னை எழலாம் என்று கூறப்படுகிறது.