'குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியிருக்க வேண்டும்' - தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவர்

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் ரேகா சர்மா கூறியுள்ளார்.
Rekha Sharma
Rekha Sharma
Published on
Updated on
1 min read

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் ரேகா சர்மா கூறியுள்ளார்.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் கடந்த ஆக. 9 ஆம் தேதி பணியில் இருந்த மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. அப்போது, கொலை சம்பவம் தொடா்பான ஆதாரத்தை சேதப்படுத்தியதாக அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் உள்ளிட்டோரை சிபிஐ கைது செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தி, மருத்துவா்களின் போராட்டத்துக்கு வழிவகுத்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என சியால்டா நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்த நிலையில் இன்று தண்டனை விவரங்களை அறிவித்துள்ளது.

குற்றவாளி சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு, குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.

வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடாகவும் மேற்கு வங்க மாநில அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை போதாது, மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தீர்ப்புக்கு பின்னர் கொல்கத்தா மருத்துவர்கள் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, 'இந்த வழக்கு எங்கள் அதிகார வரம்பிற்குள் இருந்திருந்தால், நாங்கள் முன்பே மரண தண்டனையை உறுதி செய்திருப்போம்' என்று கூறியுள்ளார்.

அதேபோல தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேகா சர்மாவும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

"சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை என்ற தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது. கொல்கத்தா காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை அறிக்கைகள், சிபிஐயிடம் சமர்ப்பிக்கப்பட்டன. எனினும், விசாரணையில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். கொல்கத்தா அரசும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

இது கொலை மட்டுமல்ல. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதுபோலவே குற்றவாளிக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும். அவருக்கு மரண தண்டனை அளித்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் நாங்கள் நிற்கிறோம்.

மிகவும் அரிதான வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். குற்றவாளி மிகவும் கொடூரமான ஒரு குற்றத்தைச் செய்திருக்கிறார். ஒட்டுமொத்த நாடும் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com