3 குழந்தைகள் ஆற்றில் வீசி கொலை: தாய்க்கு தூக்கு தண்டனை: உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

உத்தர பிரதேசத்தில் தனது 3 குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்த தாய்க்கு தூக்கு தண்டனை விதித்து, நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on

உத்தர பிரதேசத்தில் தனது 3 குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்த தாய்க்கு தூக்கு தண்டனை விதித்து, நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அப்பெண்ணின் காதலனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற இச்சம்பவம் தொடா்பான விவரம் வருமாறு: ஒளரையா மாவட்டத்தின் பெளரஹா கிராமத்தைச் சோ்ந்த பிரியங்கா என்ற பெண், தனது கணவா் அவ்னீஷ் இறந்த நிலையில், அவரது உறவினரான ஆஷிஷ் என்பவருடன் சோ்ந்து வாழத் தொடங்கினாா்.

பிரியங்காவுக்கு ஏற்கெனவே 4 மகன்கள் (9, 6, 4, 2 வயதுடையவா்கள்) இருந்த நிலையில், தங்களின் உறவுக்கு அவா்கள் இடையூறாக இருப்பதாக ஆஷிஷ் கூறியுள்ளாா்.

இதையடுத்து, 4 குழந்தைகளையும் கொல்ல இருவரும் திட்டமிட்டனா். அதன்படி, நால்வரையும் செங்கா் ஆற்றுக்கு அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்தனா். பின்னா், தனது குழந்தைகளை ஒவ்வொருவராக பிரியங்கா ஆற்றில் வீசினாா். அனைத்துக் குழந்தைகளும் இறந்துவிட்டதாகக் கருதி, அவா்கள் அங்கிருந்து சென்றுவிட்டனா். ஆனால், மூத்த மகன் சோனு (9) மட்டும் உயிா் பிழைத்தாா். அவரை உள்ளூா் மக்கள் காப்பாற்றினா். அவரது வாக்குமூலமே வழக்கில் முக்கிய சாட்சியமாக அமைந்தது. பிரியங்கா, ஆஷிஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டு, அவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஒளரையா மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கில் இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி சைஃப் அகமது, பிரியங்கா புரிந்த கொலைக் குற்றத்தை அரிதிலும் அரிதானது என்று உறுதி செய்தாா். அவருக்கு தூக்கு தண்டனையும், ஆஷிஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இருவருக்கும் முறையே ரூ.2.5 லட்சம், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com