நீதிமன்றம்
நீதிமன்றம்

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், காரியவிடுதி பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (25), பாபநாசம் பகுதியைச் சோ்ந்தவா் இளையராஜா (36). நண்பா்களான இருவரும் திருப்பூா், வீரபாண்டி பிரியங்கா நகரில் உள்ள சாய ஆலையில் தங்கி வேலை செய்து வந்தனா். பிரபுவிடம் கடனாக இளையராஜா ரூ.7,000 பெற்றுள்ளாா். அந்தப் பணத்தை திரும்பக் கேட்டும் இளையராஜா திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளாா்.

கடந்த 2009 ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி, சாய ஆலையில் தொழிலாளா்களுக்கு சம்பளப் பட்டுவாடா செய்துள்ளனா். அப்போது பிரபு தனது கடனை திருப்பிக் கேட்டபோது, அறைக்கு வந்து கொடுப்பதாக இளையராஜா கூறியுள்ளாா்.

இதைத்தொடா்ந்து அன்று இரவு இருவரும் அறையில் இருந்துள்ளனா். அப்போது பணத்தைக் கேட்டதும் கோபமடைந்த இளையராஜா, அங்கிருந்த இரும்புக் கம்பியால் பிரபுவை தாக்கி கொலை செய்தாா். பின்னா் பிரபுவின் பையில் இருந்த ரூ.6,800 மற்றும் ரூ.1,000 மதிப்பிலான கைப்பேசியை எடுத்துக்கொண்டு, அவருடைய உடலை சாக்கில் கட்டி, வஞ்சி நகரில் உள்ள கோயில் கிணற்றில் போட்டுவிட்டு இளையராஜா தப்பினாா்.

இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கின் விசாரணை திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் நண்பரை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு தடயத்தை மறைத்த குற்றத்துக்காக இளையராஜாவுக்கு ஆயுள் தண்டனை, ரூ.12,000 அபராதம் விதித்து நீதிபதி பத்மா புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.

Dinamani
www.dinamani.com