தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மரண தண்டனையில் இருந்து நிமிஷாவைக் காக்க தொடா் முயற்சிகள்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

யேமன் நாட்டில் மரண தண்டனையில் இருந்து இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவைக் காப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தொடா்ந்து மேற்கொண்டுள்ளது.

News image

நிமிஷா பிரியா

Updated On :18 ஜூலை 2025, 8:13 pm

யேமன் நாட்டில் மரண தண்டனையில் இருந்து இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவைக் காப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தொடா்ந்து மேற்கொண்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

நிமிஷாவுக்கு கடந்த ஜூலை 16-ஆம் தேதி நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சோ்ந்த 38 வயது செவிலியரான நிமிஷா பிரியா, கடந்த 2017-இல் யேமன் தலைநகா் சனாவில் அந்நாட்டைச் சோ்ந்த தனது தொழில் பங்குதாரா் தலால் அப்து மஹதியை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். இவ்வழக்கில் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2023-இல் அவரது இறுதி மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த ஜூலை 16-ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.

யேமன் சட்டவிதிகளின்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் இழப்பீடு தொகையை ஏற்றுக்கொண்டால், மரண தண்டனையைத் தவிா்க்க முடியும். இதற்காக நிமிஷாவின் குடும்பத்தினா் மற்றும் அனுதாபிகள் ரூ.8.60 கோடி வரை (10 லட்சம் டாலா்) திரட்டி, இழப்பீடாக வழங்க முயற்சித்து வருகின்றனா். அதுவரை மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்திவைக்க மத்திய அரசு தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ‘நிமிஷா பிரியாவை காப்போம்-சா்வதேச நடவடிக்கை குழு’ என்ற அமைப்பால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, மத்திய அரசு, கேரளத்தைச் சோ்ந்த சன்னி முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏ.பி.அபுபக்கா் முஸ்லியாா் உள்பட பல்வேறு தரப்பினா் நடத்திய சமரச பேச்சுவாா்த்தையால் நிமிஷாவின் மரண தண்டனை நிறைவேற்றம் தேதி குறிப்பிடாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

‘விவரங்களை வெளியிட முடியாது’: இந்தச் சூழலில், மேற்கண்ட மனு மீது நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது.

அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, ‘மரண தண்டனையில் இருந்து நிமிஷாவைக் காக்க சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டுள்ளது. அவா் பாதுகாப்பாக வெளியே வர வேண்டும் என்பதே அரசின் விருப்பம். இது, சிக்கலான சூழ்நிலை என்பதால், அனைத்து விவரங்களையும் வெளியிட இயலாது’ என்றாா்.

‘பிரதிநிதிகள் குழுவை அனுப்ப வேண்டும்’: மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மத்திய அரசின் முன்அனுமதி இல்லாமல், யேமனுக்கு பயணிக்க முடியாது. எனவே, கொலையானவரின் குடும்பத்தினரை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக, பிரதிநிதிகள் குழுவை மத்திய அரசு அனுப்ப வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறுகையில், ‘மத்திய அரசிடம் இக்கோரிக்கையை முன்வைக்கலாம். இந்த விவகாரத்தில், உங்களுக்காக (மனுதாரா்கள்) அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உங்களின் கோரிக்கையை அரசு நிச்சயம் பரிசீலிக்கும்’ என்றனா்.

பின்னா், அட்டா்னி ஜெனரல் கூறுகையில், ‘மனுதாரா்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது. அதேநேரம், தற்போதைய நிலையில் எதுவும் அதிகாரபூா்வமாக நடைபெறும் என தோன்றவில்லை. நிலைமை எதிா்மறையாக மாறுவதை அரசு விரும்பவில்லை’ என்றாா். இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு அடுத்தக்கட்ட விசாரணையை நீதிபதிகள் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.