
மேகாலயத்தில் தேனிலவு சென்ற கணவனை மனைவியே கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய விவகாரத்தில், கைதான குற்றவாளியை விமானப் பயணி ஒருவர் கன்னத்தில் அறைந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சோ்ந்தவா் சோனம் (24) மற்றும் தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷி இருவரும் மே 11 ஆம் தேதி திருமணமான நிலையில் தேனிலவு கொண்டாடுவதற்காக வடகிழக்கு மாநிலமான மேகாலயத்தின் இயற்கை எழில்மிக்க சிரபுஞ்சி அருகே உள்ள நொங்கிரியாட் கிராமத்துக்கு வந்துள்ளனர்.
அங்கிருந்த ராஜா ரகுவன்ஷி திடீரென மாயமான பின்னர், அவரது உடல் 20 கி.மீ. தொலைவில் அருவிப் பள்ளத்தாக்கில் அழுகிய நிலையில் பிணமாக கடந்த ஜூன் 2 கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொடூர சம்பவத்தில், ரகுவன்ஷியின் மனைவி, அவரின் காதலன் என அறியப்படும் ராஜ் குஷ்வாஹா உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 பேரும் கைது செய்யப்பட்டு மேகாலயத்திலிருந்து இந்தூர் விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டனர். அப்போது முகமூடி அணிந்து அழைத்துவரப்பட்ட குற்றவாளி ஒருவரை அங்கு விமான நிலையத்தில் இருந்த பயணி ஒருவர் கன்னத்திலேயே அறைந்தார். முகமூடி அணிந்தவர் யார் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.
இந்தக் குற்றச் சம்பவத்தைப் பொறுத்துக் கொள்ளாமல் விமான நிலையத்தில் இருந்த பயணியே, கொலைக் குற்றவாளியை தாக்கிய சம்பவம் விடியோவாக பதிவு செய்யப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
ராஜ் குஷ்வாஹா, விஷால் சௌகான், ஆகாஷ் ராஜ்புத் மற்றும் ஆனந்த் குர்மி ஆகிய நான்கு குற்றவாளிகளுடன் 12 பேர் கொண்ட மேகாலய காவல்துறை குழு விமான நிலையத்திற்குள் நுழைந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
அதன்பின்னர், உள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து பாதுகாப்புடன் மேகாலயா காவல்துறை குழு, குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஷில்லாங்கிற்குப் புறப்பட்டதை இந்தூர் கூடுதல் துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியா உறுதிப்படுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.