
ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், ஆமதாபாத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.
விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட விமானம் சில வினாடிகளிலேயே கீழே விழுந்து மேகானி என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
ஏர் இந்தியா போயிங் 787-8 ரக விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.
ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய இடம் குடியிருப்புப் பகுதி என்பதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதையும் படிக்க.. விமானியிடமிருந்து வந்த அவசர அழைப்பு, ஆனால் பேசவில்லை! மே டே கால் என்றால்?
தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. விமானம் மதியம் 1.30 மணிக்குப் புறப்பட்ட நிலையில் 2 மணிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
லண்டன் செல்லும் விமானம் என்பதால் வெளிநாட்டினரும் விபத்தில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், வெகு தொலைவு செல்ல வேண்டியது என்பதால் விமானத்தில் எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டிருக்கும் என்பதால், விமான விபத்து நேரிட்ட இடத்தில் பயங்கரமாக தீப்பற்றி எரியக் கூடும் என்பதால், அங்கு தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து வருகிறார்கள்.
மேலும், சம்பவம் நடந்த இடம் புகைமூட்டமாக இருப்பதால், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.