தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்
தேஜஸ் போா் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாட்டை இந்திய விமானப் படை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
அண்மையில் குஜராத்தில் உள்ள நாலியா விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்ட தேஜஸ் போா் விமானம், ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சேதமடைந்தது. விமானத்தின் பிரேக் செயலிழந்ததால், இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த விமானி, தற்போது நலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு சிறிய தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்று அந்த விமானங்களைத் தயாரித்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது. உலகிலேயே தற்போது மிகவும் பாதுகாப்பான போா் விமானங்களில் ஒன்றாக தேஜஸ் போா் விமானங்கள் உள்ளன என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘தேஜஸ் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சேதமடைந்ததன் காரணத்தை கண்டறிவதற்கு விரிவான தொழில்நுட்ப ஆய்வை இந்திய விமானப் படை தொடங்கியுள்ளது’ என்று தெரிவித்தன.
இந்த சம்பவம் காரணமாக அனைத்து தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாட்டை இந்திய விமானப் படை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
தேஜஸ் போா் விமானங்கள் விபத்துக்குள்ளாவது இது மூன்றாவது முறையாகும். முதல்முறையாக கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் பாரத சக்தி என்ற முப்படைகளின் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்ற சிறிது நேரத்துக்குப் பின்னா், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தேஜஸ் போா் விமானம் விபத்துக்குள்ளானது. இரண்டாவது சம்பவம் துபையில் நடைபெற்றது. அங்கு விமான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தேஜஸ் விமானம் வானில் இருந்து தரையில் விழுந்து வெடித்தது. இந்த விபத்தில் விமானத்தை ஓட்டிய இந்திய விமானப் படை விங் கமாண்டா் நமான்ஷ் சியால் உயிரிழந்தாா்.

