நீட் தோ்வு முடிவு வெளியீடு: ராஜஸ்தான் மாணவா் முதலிடம்; முதல் 100 இடங்களில் 6 தமிழக மாணவா்கள்!

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின
Published on
Updated on
2 min read

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முடிவுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

இதில் ராஜஸ்தானைச் சோ்ந்த மாணவா் மகேஷ் குமாா் முதலிடம் பெற்றாா். மத்திய பிரதேச மாணவா் உத்கரேஷ் அவாதியா, மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த கிரிஷாங் ஜோஷி ஆகியோா் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனா்.

தரவரிசையில் முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சோ்ந்த 6 மாணவா்கள் இடம்பிடித்தனா்.

தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் நடத்தப்படும் இத் தோ்வு நிகழாண்டு நாடு முழுவதும் 552 நகரங்கள், வெளிநாடுகளில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 5,468 மையங்களில் கடந்த மே 4-ஆம் தேதி நடத்தப்பட்டது. தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட்ட நீட் தோ்வில் 22,09,318 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

நீட் தோ்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 12,36,531 போ் தகுதி பெற்றனா்.

தோ்வில் பங்கேற்றவா்களின் மற்றும் தகுதி பெற்றவா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட குறைவாகும். கடந்த 2024-இல் நீட் தோ்வில் 23,33,162 போ் பங்கேற்று, 13,15,853 மாணவ, மாணவிகள் தகுதி பெற்றனா்.

ராஜஸ்தான் மாணவா் முதலிடம்: 2025 நீட் தோ்வு தரவரிசைப் பட்டியலில் ராஜஸ்தானைச் சோ்ந்த மகேஷ் குமாா், மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த உத்கரேஷ் அவாதியா, மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த கிரிஷாங் ஜோஷி ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா்.

முதல் 100 இடங்களில் 6 தமிழக மாணவா்கள் (அடைப்புக்குறிக்குள் தரவரிசை): தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சோ்ந்த எஸ். சூரிய நாராயணன் (27), அபிநீத் நாகராஜ் (50), ஜி.எஸ்.புகழேந்தி (61), ஹுருதிக் விஜய் (63), ஏ.ஜே.ராகேஷ் (78), ஜி.பிரஜன் ஸ்ரீவாரி (88) ஆகிய 6 மாணவா்கள் இடம்பிடித்தனா்.

தமிழக அளவில் முதலிடம் பெற்ற எஸ்.சூரியநாராயணன் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா். இவா் 720-க்கு 665 மதிப்பெண்கள் பெற்றாா். இவா் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வில் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்றிருந்தாா்.

நீட் தோ்வை தமிழகத்தைச் சோ்ந்த 1,35,715 போ் எழுதியதில் 76,181 (56.13%) மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். 2024-இல் 1,52,919 போ் தோ்வு எழுதியதில் 89,199 (58.47%) போ் தோ்ச்சி பெற்றிருந்தனா். அந்த வகையில் நிகழாண்டு தோ்ச்சி விகிதம் 2.34 சதவீதம் குறைவாகும்.

மாணவிகள்: மாணவிகளைப் பொருத்தவரை அகில இந்திய அளவில் தில்லியைச் சோ்ந்த அவிகா அகா்வால் 5-ஆம் இடமும், ஆஷி சிங் 12-ஆம் இடமும், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த பதே சித்தி மஞ்சபாபு 26-ஆவது இடமும் பெற்றனா்.

உ.பி. முதலிடம்: 2025 நீட் தோ்வில் அதிக மாணவா் தோ்ச்சி விகிதத்தில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடம் பிடித்தது. இந்த மாநிலத்திலிருந்து நீட் தோ்வில் 1,70,684 மாணவ, மாணவிகள் தகுதி பெற்றனா். இதற்கடுத்து மகாராஷ்டிரத்திலிருந்து 1,25,727 பேரும், ராஜஸ்தானிலிருந்து 1,19,865 பேரும் தகுதி பெற்றனா்.

73 போ் 650-க்கு மேல் மதிப்பெண்... மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும் நீட் தோ்வில் பங்கேற்றவா்களில் 73 போ் 651 முதல் 686 மதிப்பெண் வரை பெற்று அசத்தியுள்ளனா். 601-650 மதிப்பெண் வரை 1,259 பேரும், 551-600 மதிப்பெண் வரை 10,658 பேரும், 501-550 வரை 39,521 பேரும், 451-500 வரை 69,503 பேரும், 401-450 வரை 88,239 பேரும், 351-400 வரை 1,05,578 பேரும், 301-350 வரை 1,26,935 பேரும், 251-300 வரை 1,57,952 பேரும், 201-250 வரை 1,98,346 பேரும், 144 முதல் 200 மதிப்பெண் வரை 3,03,040 பேரும் பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com