மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவை தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

News image

தில்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவை செவ்வாய்க்கிழமை சந்தித்து தமிழக மருத்துவத் துறையின் கோரிக்கை மனுவை வழங்கிய தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன், துறைச் செயலர் ப. செந்தில்குமார்.

Updated On :4 மார்ச் 2025, 9:08 pm

DIN

நமது சிறப்பு நிருபர்

தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவை தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ப. செந்தில்குமார், தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் மரு.அருண் தம்புராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்கிற கொள்கையின்படி தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகள் தேவை.

திருப்பூர், நாமக்கல், விருதுநகர் ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளில் கட்டமைப்பும் ஆசிரியர் பணியிடங்களும் இருக்கும் நிலையில் தலா 50 இடங்களை அதிகரிக்க வேண்டும்.

தமிழகத்தில் மக்கள்தொகை அதிகரிப்பு, சுகாதாரத்தின் அவசியத்தின் அடிப்படையில் கூடுதலாக 50 (24 நகர்ப்புறம் 26 ஊரகம்) ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

சர்வதேச அளவில் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. தமிழக முழுவதும் புற்றுநோய் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ.447.94 கோடி நிதி உதவி கோரிக்கை வைக்கப்பட்டது. அத்துடன் தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவுகளை மேம்படுத்த ரூ. 603.45 கோடி நிதி உதவி கோரப்பட்டது.

கோவைக்கு எய்ம்ஸ்: நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் 2-ஆவது எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுகிறது. தமிழகம் சார்பில் கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க கோரிக்கை வைக்கப்பட்டது.

மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகள் பறிக்கப்படும் விவகாரங்கள் குறித்தும் மத்திய அமைச்சரிடம் பேசினோம்.

"நீட்' தேர்வு விலக்கை வலியுறுத்தினோம். மருத்துவ பட்டப் படிப்புகளில் தேசிய மருத்துவ ஆணையம் மூலம் 100 சதவீதம் பொதுக் கலந்தாய்வு செய்து மாணவர்களை அனுமதிக்கும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக முதல்வர் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதம் இச்சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

மூடப்படும் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை படிப்பைத் தொடரவைக்கும் பொறுப்பு மாநில அரசிடம் சுமத்தப்படுகிறது. இதற்கான விதிமுறைகளுக்கும் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. இவை உள்ளிட்ட 11 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தனது துறைச் செயலர், இணை செயலர்கள் ஆகியோருடன் இதுகுறித்து உடனுக்குடன் ஆலோசனை செய்தார்.

இந்தக் கோரிக்கைகளில் சிலவற்றுக்கு உடனடியாக ஒப்புதல் தரப்படும் என்றும், மற்றவை குறித்து முடிவெடுத்து அறிவிப்பதாகவும் அமைச்சர் நட்டா தெரிவித்தார்.

தேசிய சுகாதாரத் திட்டத்துக்கு (என்ஹெச்எம்) நிதி முறையாக வருகிறது. தற்போது, புற்றுநோய் நரம்பியல் மையங்களுக்கு ரூ.1,000 கோடியும், 6 மருத்துவக் கல்லூரிக்கு தலா ரூ.700 கோடி வீதம் ரூ. 4,200 கோடியும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார நிலையங்கள் போன்றவற்றுக்கு மத்திய அரசு வழங்கும் பங்குக்கான நிதி உள்ளிட்டவை என மொத்தம் சுமார் ரூ. 8,000 கோடி வரை மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.

கோவை எய்ம்ஸýக்கான நிலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.