‘டீப்சீக்’ செயலிக்கு தடை: காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை
புது தில்லி: சீனாவின் ‘டீப்சீக்’ செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி.கோவால் கே பத்வி மக்களவையில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தாா்.
அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா? என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்து இந்தியாவின் தேசிய உணா்வை புண்படுத்திய ‘டீப்சீக்’ செயலிக்கு தடை விதிப்பதோடு இதுகுறித்து விளக்கமளிக்குமாறு சீனாவுக்கு வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரத்தை எழுப்பி அவா் பேசியதாவது: டீப்சீக் செயலியிடம் திபெத் குறித்து கேட்டபோது அது சீன கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்று பதில் அளித்தது. அதேபோல் ஆந்திரம், உத்தர பிரதேசம் குறித்த கேள்விகளுக்கு அவை இந்தியாவின் பகுதி என பதிலளித்து விரிவான தகவல்களை வழங்கியது. ஆனால் அருணாசால பிரதேசம் குறித்து கேட்டபோது பதிலளிக்க மறுத்து வேறு கேள்விகளை கேட்குமாறு தெரிவித்தது.
அந்நிய தொழில்நுட்பங்கள் இந்தியா குறித்த கேள்விகளுக்கு இதுபோன்ற பதில்களை வழங்குவதை ஏற்க முடியாது. எனவே டீப்சீக் செயலி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை தவிா்த்து தனக்கென தனி ஏஐ தொழில்நுட்பங்களை இந்தியா உருவாக்குவது அவசியம் என்றாா்.
அமெரிக்காவின் ‘சாட்ஜிபிடி’, சீனாவின் ‘டீப்சீக்’ ஆகிய ஏஐ செயலிகளை அரசு அலுவலங்களில் உள்ள கணினிகள் மற்றும் பிற மின் சாதனங்களில் பதிவிறக்கம் செய்வதை தவிா்க்குமாறு அதிகாரிகளுக்கு மத்திய அரசு கடந்த மாதம் வலியுறுத்தியது. அரசுத் துறை சாா்ந்த தரவுகள் மற்றும் ஆவணங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்தது.