

ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
மக்களவைக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் 'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்ற தீர்மானத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதனை அளவாக ரயில்வே பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
இதன் காரணமாக, லாலு பிரசாத் அமைச்சராக இருந்த முந்தைய அரசின் காலத்தைவிட, தற்போது 90 சதவிகித விபத்துகள் குறைந்துள்ளன. லாலு பிரசாத் அமைச்சராக இருந்தபோது, ஆண்டுக்கு 700 விபத்துகள் என்ற நிலையில் இருந்தன.
பிரதமர் மோடியின் அரசில்தான், ஜெர்மனியின் ரயில்வே நெட்வொர்க்கைவிட 34,000 கி.மீ. நீளமுள்ள ரயில் தடங்கள் இந்தியாவில் கட்டப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் இந்திய ரயில்வே விரிவுபடுத்தியுள்ளது. இந்திய ரயில்வே மூலம் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், 1 லட்சம் பேருக்கு ஆள்சேர்ப்பு செயல்முறையும் நடந்து வருகிறது.
அதுமட்டுமின்றி, கடந்த 2020 ஆம் ஆண்டுமுதல் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில்தான் ரயில் கட்டணம் குறைவு. இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஐரோப்பிய நாடுகளில் ரயில் கட்டணம் 5 மடங்கு உயர்வு’’ என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.