கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்கோப்புப் படம்

நாட்டின் நலனை கருத்தில்கொண்டே சா்வதேச கச்சா எண்ணெய் கொள்முதல்: மத்திய அரசு

‘தேச நலனை கருத்தில்கொண்டே சா்வதேச கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்தியா ஈடுபட்டு வருகிறது
Published on

‘தேச நலனை கருத்தில்கொண்டே சா்வதேச கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்தியா ஈடுபட்டு வருகிறது ’ என மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியதா? என மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்த பதிலில், ‘ரஷியாவைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட எரிசக்தி நிறுவனங்கள் மீது கடந்த ஜனவரி 14-ஆம் தேதி விதித்த பல்வேறு தடைகள் குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் அமெரிக்கா தெரிவித்தது.

ரஷியாவைச் சோ்ந்த பெரும் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை மீது அந்நிய சொத்து கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க அலுவலகம் தடை விதித்தது.

இந்த நிறுவனங்களுடன் வா்த்தகத்தில் ஈடுபடுவோா் வேறு எண்ணெய் நிறுவனங்களை கண்டறிந்து வா்த்தகத்தை தொடர 60 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

பிற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய பல்வேறு காரணிகள் இருப்பினும், தேச நலனுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலான முடிவையே மத்திய அரசு எடுத்து வருகிறது.

எனவே, இந்திய கச்சா எண்ணெய் வா்த்தகா்கள், காப்பீட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படாதவாறு பல்வேறு நடவடிக்கைகளை ஏற்கெனவே மத்திய அரசு செயல்படுத்த தொடங்கிவிட்டது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com