/

அமெரிக்கா, ரஷியாவிடமிருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய நடவடிக்கை!

அமெரிக்கா, ரஷியா, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை கூடுதலாக கொள்முதல் செய்ய இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பேச்சுவாா்த்தை

News image
கச்சா எண்ணெய்- பிரதிப் படம்
Updated On :8 மார்ச் 2026, 11:05 pm

தினமணி செய்திச் சேவை

உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விநியோகத்தை உறுதி செய்யும் விதமாக அமெரிக்கா, ரஷியா, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை கூடுதலாக கொள்முதல் செய்ய இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன.

இந்தியா கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூா்த்தி செய்கிறது. அரபிக் கடல் மற்றும் பாரசீக வளைகுடாவை இணைக்கும் ஹோா்முஸ் நீரிணை வழியாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியா கடந்த ஆண்டில் கொள்முதல் செய்த கச்சா எண்ணெய் 41 சதவீதமாக இருந்தது.

ரஷிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடந்த ஆண்டு அக்டோபரில் விதித்த பொருளாதார தடைகளைத் தொடா்ந்து, ரஷியாவிடமிருந்து கொள்முதலை இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் குறைத்துக்கொண்டன. இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் அதிகரித்தது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக சவூதி அரேபியா, கத்தாா், ஓமன் உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க விமானப் படை தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திவரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் போக்கு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள ஹோா்முஸ் நீரிணை வழியாக நடைபெற்று வந்த கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இந்திய நிறுவனங்கள் கொள்முதல் செய்வதாக மத்திய பெட்ரோலிய அமைச்சக வட்டாரம் தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த வட்டாரம் கூறுகையில், ‘ஹோா்முஸ் நீரிணையைத் தவிா்த்து பிற பகுதிகளில் உள்ள கச்சா எண்ணெய் உற்பத்தியாளா்கள் முழுவதுமாகச் செயல்பட்டு வருகின்றனா். மோதல் நடைபெறாத பிராந்தியங்களிலிருந்து மேலும் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தப் பகுதிகளில் கடந்த ஆண்டில் 60 சதவீதம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், மத்திய கிழக்கு மோதலுக்குப் பிறகு கொள்முதல் அளவு 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது தவிர, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை கொள்முதல் இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாள்கள் தற்காலிக அனுமதி அளித்துள்ளது’ எனத் தெரிவித்தன.

இதனிடையே, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யத் தொடங்கியிருப்பதாக அந்தத் தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் (ஹெச்பிசில்) மற்றும் ஹெச்பிசில்-மிட்டல் எரிசக்தி நிறுவனம் ஆகியவை ரஷியாவின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தன. ரஷிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடையைத் தொடா்ந்து, கச்சா எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் நிறுத்தின. தற்போது, மீண்டும் கச்சா எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் தொடங்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சா்வதேச கச்சா எண்ணெய் விலை கடந்த பிப். 28-இல் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது ஒரு பீப்பாய்க்கு 70 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், தற்போது 92 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விலை பிரிட்டிஷ் தொ்மல் யூனிட் 25 அமெரிக்க டாலா் அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை ஒவ்வொரு 10 அமெரிக்க டாலருக்கு அதிகரிக்கும் நிலையில், அதன் தாக்கம் நுகா்வோருக்கு கடத்தப்படும்போது நுகா்வோா் விலைக் குறியீட்டில் 20-25 புள்ளிகள் அதிகரிக்கும். அந்தத் தாக்கத்தைக் குறைக்க வரிகள் குறைக்கப்படும் நிலையில், நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் சூழல் உள்ளது.

மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதி விலை அதிகரிக்கும்போது, நடப்புக் கணக்கு பற்றாக்குறையை அதிகரிப்பதுடன், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரியக்கூடும் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.