கடந்த 2022 முதல் 2024 ஆம் ஆண்டு இறுதி வரை பிரதமர் மோடி மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்கு மொத்தமாக ரூ.259 கோடி செலவானதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமரின் அரசுமுறை வெளிநாட்டுப் பயணங்களுக்கான ஏற்பாடுகளுக்காக இந்திய தூதரகங்கள் செலவிட்ட தொகை குறித்த தகவலை மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே கோரிக்கை வைத்திருந்தார். மேலும், அவருக்கான தங்குமிடம், போக்குவரத்து ஏற்பாடுகள், சமூக வரவேற்புகள் மற்றும் இதர செலவுகள் என விரிவான விவரங்களையும் கோரியிருந்தாா்.
கார்கேவின் கோரிக்கையை ஏற்ற மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் பபித்ரா மார்ஹெரிட்டா எழுத்துப்பூர்வமாக அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையில், 2022 ஆம் ஆண்டு மே முதல் கடந்த ஆண்டு டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் பிரதமா் மேற்கொண்ட அரசுப் பயணங்களுக்கான செலவின விவரங்கள், ஜொ்மனி முதல் குவைத் வரை 38 பயணங்கள் வாரியாக மத்திய அரசின் பதில் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக கிட்டத்தட்ட ரூ.259 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செலவுகள் தங்குமிடம், இடத்துக்கான கட்டணம், பாதுகாப்பு, போக்குவரத்து, இதர செலவீனங்கள் என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தங்குமிடத்துக்காக ரூ.104 கோடியும், இதர செலவுகளாக ரூ.75.7 கோடியும், போக்குவரத்துக்கு ரூ.71.7 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நாடுகளுக்கான செலவுகளாக அமெரிக்கா (ரூ.38.2 கோடி), ஜப்பான் (ரூ.33 கோடி), ஜெர்மனி (ரூ.23.9 கோடி), ரஷியா (ரூ.16.1 கோடி), பிரான்ஸ் (ரூ.15.7 கோடி), இத்தாலி (ரூ.14.4 கோடி) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (ரூ.12.7 கோடி) செலவிடப்பட்டுள்ளது.
இந்த மூன்று ஆண்டுகாலத்தில் தனி நபருக்கான அதிகபட்ச செலவாக 2023 ஆம் ஆண்டு அமெரிக்க பயணத்துக்கு மட்டும் ரூ.22.89 கோடியும், குறைந்தபட்ச செலவாக நேபாள பயணத்துக்கு ரூ.80.01 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி 2022 ஆம் ஆண்டில் 8 நாடுகளுக்கும், 2023-ல் 10 நாடுகளுக்கும், 2024-ல் 16 நாடுகளுக்கும் அரசு முறைப் பயணமாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










