ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ள பாஜக..

Published On :26 மார்ச் 2025, 3:42 am IST

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தங்கள் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் "போஃபர்ஸ் கேட்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த ஊழலில் இடைத்தரகராகச் செயல்பட்ட குவாட்ரோச்சியுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு இருந்த நெருங்கிய நட்பு குறித்தும் அவர் இந்தப் புத்தகத்தில் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தில் போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக அம்பலப்படுத்தப்பட்டுள்ள விஷயங்கள் கவலை தருகின்றன. பாதுகாப்பு ஒப்பந்தங்களை தனக்குச் சாதகமாக இறுதிசெய்து கொள்வதற்காக குவாட்ரோச்சி அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் அவரது மனைவி சோனியா காந்திக்கும் தனக்கும் இருந்த நெருங்கிய நட்புறவை பயன்படுத்திக் கொண்டார்.

ராஜீவ் காந்தியின் பதவிக்காலத்தில் பாதுகாப்புத் துறை தொடர்பான கோப்புகள் குவாட்ரோச்சிக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். தான் தேர்வு செய்யும் நிறுவனங்களுக்கு பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை வழங்கும் வகையில் கோப்புகளை அவர் திருத்துவதற்காக இப்படி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனது பதவிப் பிரமாணத்தை மீறிய செயல் இல்லையா என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைமை பதில் அளிக்க வேண்டும். போஃபர்ஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இடைத்தரகர் குவாட்ரோச்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கணக்குகள் சோனியா காந்தியின் அறிவுறுத்தலின்பேரில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது சிபிஐ-யால் கடந்த 2005இல் முடக்கத்தில் இருந்து நீக்கப்பட்டன.

இவையெல்லாம் இந்த நாட்டுக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் ஆகாதா? சோனியா காந்தி குடும்பத்தின் தலையீடு காரணமாகவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. குவாட்ரோச்சியுடனான தங்கள் குடும்பத்தின் உறவுகள் தொடர்பாக விரிவாக விளக்கும் வரை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தங்கள் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அதுவரை அவர்களுக்கு எம்.பி.யாகத் தொடரும் உரிமை இல்லை.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த நாட்டின் பக்கம் நிற்கப் போகிறாரா? ஊழல் செய்த சோனியா காந்தி குடும்பத்துடன் நிற்கப் போகிறாரா?

தில்லியில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகளும் மாநிலங்களவைத் தலைவரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக நாங்கள் (பாஜகவினர்) காத்திருக்கிறோம்.

நாட்டில் ஊழலுக்கு இடமில்லை என்பதிலும், சட்டத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்பதிலும் மக்கள் உறுதியாக உள்ளனர் என்றார் அவர்.

ஸ்வீடனில் இருந்து இந்திய ராணுவத்துக்கு போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்கும் பேரத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் தொடர்ந்து செய்திக் கட்டுரைகளை வெளியிட்டு ஊழலை அம்பலப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.