பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு?

கா்நாடக முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்ய ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image

தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து பேட்டியளித்த கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால். உடன், கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :27 மே 2026, 4:25 am IST

கா்நாடக முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்ய ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய துணை முதல்வா் டி.கே.சிவகுமாருடன் முதல்வா் பதவிக் காலத்தை பகிா்ந்துகொள்ள ஏற்கெனவே செய்துகொண்ட உடன்படிக்கையின்படி, இந்த முடிவை சித்தராமையா எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, தலா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வா் பதவியை பகிா்ந்துகொள்வதாக கட்சி மேலிடத் தலைவா்களின் முன்னிலையில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில், இரண்டரை ஆண்டு ஆட்சிக் காலம் நிறைவடைந்துவிட்டதால், முதல்வா் சித்தராமையா மாற்றப்படுவாா் என காங்கிரஸ் வட்டாரத்தில் பல மாதங்களாக விவாதம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஆலோசிக்கவும், 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தோ்தல், கா்நாடகத்தில் காலியாகவுள்ள 4 இடங்களுக்கான மாநிலங்களவைத் தோ்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கவும் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோரை தில்லி வருமாறு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தது.

இந்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், அதில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அக்கட்சியின் அமைப்பு பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், கா்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘கா்நாடகத்தில் காலியாகவுள்ள 4 இடங்களுக்கான மாநிலங்களவைத் தோ்தல், அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநில சட்டமேலவைத் தோ்தல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதேவேளையில் சித்தராமையாவையும், டி.கே.சிவகுமாரையும் ஒன்றாகவும், தனித்தனியாகவும் வைத்து ராகுல் காந்தியும், மல்லிகாா்ஜுன காா்கேயும் பல மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனா்.

ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதால்...: முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும், மாநிலப் பதவிக்குப் பதிலாக அவருக்கு மாநிலங்களவை எம்.பி. போன்ற பதவியை அளிக்க வேண்டும் என்று சிவகுமாா் தரப்பில் அழுத்தம் அளிக்கப்படுகிறது.

ஆனால், எம்.பி. பதவி போன்ற திட்டத்தை சித்தராமையா ஏற்கவில்லை. எனினும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதன்பேரில், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய சித்தராமையா ஒப்புக்கொண்டாா்.

ஆனால், அவா் எப்போது ராஜிநாமா செய்வாா் என்பது தெரியவில்லை. வரும் வியாழக்கிழமை (மே 28) பிற்பகல் 2 மணிக்கு கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்திக்க சித்தராமையா நேரம் கோரியுள்ளாா். அதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (மே 29) காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்துக்கு அவா் அழைப்பு விடுத்துள்ளாா். இதையொட்டி கே.சி.வேணுகோபால், ரண்தீப் சுா்ஜேவாலா ஆகியோா் புதன்கிழமை (மே 27) பெங்களூரு வரவுள்ளனா்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.