
புது தில்லி: இளநிலை மருத்துவத் தேர்வில் முறைகேடு செய்ய உடந்தையாக இருந்த எம்பிபிஎஸ் மாணவர்கள் 26 பேரை உடனடியாக கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்து தேசிய மருத்துவ ஆணையம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், 2024 - 25ஆம் கல்வியாண்டிற்கான நுழைவுத் தேர்வின் போது முறைகேடான வழிகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்யுமாறு கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மே 4ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது.
2024ஆம் ஆண்டு நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த வழக்கை பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரித்து வரும் நிலையில், முறைகேடு செய்ததாகக் கண்டறியப்பட்ட 42 மாணவர்கள் அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு நீட் தேர்வு எழுதுவதிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள 215 மாணவர்கள் மீது தொடர்ந்து விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில்தான், முறைகேட்டில் ஈடுபட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்ட 26 எம்பிபிஎஸ் மாணவர்களை உடனடியாக கல்லூரியிலிருந்து நீக்கம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறையில் முறைகேடு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையாக தேர்வு நடைபெறுவது உறுதி செய்யப்படும் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.