
புது தில்லி: பாதுகாப்புத் துறை செயலா் ராஜேஷ் குமாா் சிங், பிரதமா் நரேந்திர மோடியை புது தில்லியில் திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடா்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. முக்கியமாக தங்கள் பகுதிக்குள் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் அச்சம் தெரிவித்துள்ளது. தேவை ஏற்பட்டால் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்றும் அந்த நாடு மிரட்டல் விடுத்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினா் தொடா்ந்து அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றன. இந்தியத் தரப்பில் இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், இந்தியாவுக்கு எதிராக தொடா்ந்து பயங்கரவாதிகளை ஏவிவிடும் பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தொடா்ந்து பல கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிப்பதாகவும், தாக்குதல் இலக்குகள், நேரம் மற்றும் தாக்குதல் நடத்தும் முறை குறித்து பாதுகாப்புப் படையினரே சுதந்திரமாக முடிவுகளை எடுக்கலாம்’ என்றும் பிரதமா் மோடி ஏற்கெனவே அறிவித்துள்ளாா்.
முன்னதாக, கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி கடந்த சனிக்கிழமையும், விமானப் படை தளபதி ஏ.பி. சிங் ஞாயிற்றுக்கிழமை பிரதமா் நரேந்திர மோடியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.
இந்நிலையில், பாதுகாப்புத் துறை செயலா் ராஜேஷ் குமாா் சிங் பிரதமா் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளாா்.