உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள்: யார் யார் எவ்வளவு வைத்திருக்கிறார்கள்?
புது தில்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் அனைத்தும், அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், தலைமை நீதிபதி முதல் அனைத்து நீதிபதிகளின் சொத்து விவரங்களும் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய உச்சநீதிமன்றம் 2025, ஏப்.1 அன்று முடிவுசெய்தது. அதன்படி ஏற்கெனவே சில நீதிபதிகளின் சொத்து விவரங்கள் பெறப்பட்டு அவை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. தற்போது பிற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் பெறப்பட்டு விரைவில் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 33 நீதிபதிகளில், தலைமை நீதிபதி உள்பட 21 நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை அளித்துவிட்டனர்.
அதன்படி, தலைமை நீதிபதியின் சஞ்சீவ் கன்னாவின் சொத்து விவரம்..
இவருக்கு அசையா சொத்துகளாக தெற்கு தில்லியில் மூன்று படுக்கை வசதிகொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடும், தில்லி காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் நான்கு படுக்கை வசதிகொண்ட குடியிருப்பும் உள்ளது. இந்த வீட்டை அவர் 2019ஆம் ஆண்டு வாங்கியிருக்கிறார். 2004ஆம் ஆண்டு தனது தந்தை இறந்த பிறகு பூர்வீக வீட்டை விற்றுவிட்டு இந்த குடியிருப்பை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதில்லாமல், நான்கு படுக்கை வசதிகொண்ட குடியிருப்பில் 56 சதவீத பங்குகள் இவரிடமும் 44 சதவீத பங்குகள் இவரது மகளிடமும் உள்ளது.
அது மட்டுமல்லாமல், தேவ் ராஜ் கன்னா ஹிந்து பிரிக்கப்படாத குடும்பச் சொத்தில் பங்குதாரராகவும் உள்ளார்.
2025ஆம் ஆண்டு வங்கியில் ரூ.55.75 லட்சத்தை நிரந்தர வைப்பாக செலுத்தியிருக்கிறார்.
இதில்லாமல், 1989ஆம் ஆண்டு வருங்கால வைப்பு நிதிக் கணக்குத் தொடங்கி அதில் ரூ.1 கோடி வைத்திருக்கிறார். பொது வருங்கால வைப்பு நிதியின் மதிப்பு ரூ.1.77 கோடியாக உள்ளது. இவர் ஆண்டுக்கு ரூ.29,625 செலுத்தி ஆயுள் காப்பீடு எடுத்துள்ளார். இவர் 1978 - 79 முதல் வருமான வரி செலுத்தி வருகிறார்.
நீதிபதி பி.ஆர். கவாய் சொத்து விவரம்
நீதிபதி பூஷண் ராமகிருஷ்ணா கவாய்க்கு சொந்தமாக, அவரது தந்தை கொடுத்த மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு வீடு இருக்கிறது. மும்பை மற்றும் புது தில்லியிலும் சொந்தமாக வீடுகள் உள்ளன.
அமராவதியிலும், கேதாபூர், கடோல், நாக்பூர், மகாராஷ்டிரத்தில் பல்வேறு இடங்களில் வேளாண் நிலங்களும் சொந்தமாக வைத்துள்ளார்.
வருங்கால வைப்பு நிதியில் ரூ.6.59 லட்சமும், பொது வருங்கால வைப்பு நிதியில் ரூ.35.86 லட்சமும் வைத்துள்ளார்.
நீதிபதி கவாய் வசம் அசையும் சொத்துகளாக ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், கையில் ரொக்கமாக ரூ.61,320ம் உள்ளது. அவரது வங்கிக் கணக்கில் ரூ.19 லட்சமும், இதர சொத்துகளாக ரூ.54 லட்சமும் உள்ளது.
இவரது மனைவியிடம் 750 கிராம் தங்க நகைகள் உள்ளன. இது திருமணத்தின்போது வரதட்சணையாக வழங்கப்பட்டது.
கடன் விவரத்தில், நீதிபதி கவாய், மும்பை குடியிருப்புக்காக ரூ.7 லட்சம் வைப்புத் தொகையாகப் பெற்றிருப்பதாகவும், தில்லி வீட்டை வாடகைக்கு விட ரூ.17 லட்சம் முன்பணம் பெற்றதாகவும் அவர்களது குடும்பச் சொத்தின் மீது ரூ.1 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி சூர்ய காந்த்
சத்தீஷ்கரில் மனைவி மற்றும் குடும்பச் சொத்தாக ஒரு வீடும், பஞ்ச்குலாவில் 13.5 ஏக்கர் மதிப்புள்ள வேளாண் நிலமும், மீண்டும் 300 சதுர அடி நிலப்பரப்பு, புது தில்லியில் உள்ள வீடு, சத்தீஷ்கரில் பண்ணை வீடும் உள்ளன.
குருகிராமிலும் சொந்தமாக வாங்கிய பண்ணை வீடும், 12 ஏக்கர் வேளான் நிலம் மற்றும் வீட்டில் மூன்றில் ஒரு பங்கும், ஹிசாரில் உள்ள பண்ணை வீட்டிலும் பங்கும் உள்ளது.
இவருக்கு 16 நிரந்தர வைப்புக் கணக்குகளில் ரூ.1.05 கோடி இருக்கிறது. வைப்பு டிநதியில் ரூ.1,15 கோடியும், பொது வைப்பு நிதியில் ரூ.12,5 லட்சமும் உள்ளது. ரூ.15 லட்சம் முதலீடு செய்திருக்கிறார். ரூ.50 லட்சத்துக்கு ஆயுள் காப்பீடு வைத்திருக்கிறார். ரூ.10 லட்சத்துக்கு நகை, 8 லட்சத்துக்கு வாகனம், வங்கிக் கையிருப்பாக ரூ.20 லட்சம் இருக்கிறது.
வீட்டில் உள்ள பொருள்களுக்கு ரூ.5ட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது மனைவியிடம் ரூ.500 கிராம் தங்க நகைகள் உள்ளன. இது திருமணத்தின்போது வரலட்சணையாக வழங்கப்பட்டதாம்.
இவருக்கு வீட்டுக் கடனாக ரூ.30 லட்சம் இருப்பதாகவும் வாகனக் கடன் ரூ.5 லட்சம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

