பட்டாசுகளுக்குத் தடை விதிக்க உ.பி., ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களுக்கு உத்தரவு!

தில்லி என்சிஆர் பகுதிகளில் ஒரு மாதத்திற்குள் பட்டாசுகளுக்கு தடை விதிக்க ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
crackers
ENS
Published on
Updated on
1 min read

தேசிய தலைநகரான தில்லி என்.சி.ஆர். பகுதிகளில் ஒரு மாதத்திற்குள் பட்டாசுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் காற்று மாசுபாடு தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசு வெடிப்பதைத் தடுக்க, குறை தீர்க்கும் மற்றும் புகார் அளிக்கும் வழிமுறைகளை உருவாக்குமாறும் இந்த மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.

தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவையடுத்து, தில்லியில் பட்டாசு உற்பத்தி செய்ய, சேமிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு, உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தில்லியைப் பின்பற்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், பிரிவு 50-ன் கீழ் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியின் கீழ் வரும் தங்கள் மாநிலப் பகுதிகளில் பட்டாசுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட மாநிலங்கள் ஒரு மாதத்திற்குள் இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் அதனை செயல்படுத்தும் வழிமுறைகள் மற்றும் இதுதொடர்பாக ஒரு குறை தீர்க்கும் குழுவையும் அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பட்டாசுகளுக்குத் தடை மற்றும் அதன் அபராதம் குறித்த தகவல்களை மக்களுக்கு தொடர்ந்து தெரியப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

அண்டை மாநிலங்களில் எரிக்கும் பயிர்க் கழிவுகள், தலைநகரில் வாகனப் பெருக்கம் ஆகியவற்றால் தில்லியில் காற்று மாசு அதிகரித்துக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com