
போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதனால் தலைநகர் தில்லி முழுவதுமே இருளில் மூழ்கியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், நாடு முழுவதும் இன்று மாலை போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் சூழலின்போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து மக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
நாடு முழுவதும் இன்று (மே 7) மாலை பெரும்பாலான மாநிலங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. தலைநகர் தில்லி, மும்பை, சென்னை, புணே போன்ற பெரு நகரங்களிலும் ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற எல்லையோர மாநிலங்களிலும் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலதரப்பில் போர் சூழலின்பொது செயல்படுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க |பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகள், மக்கள் ஆதாரங்களை வழங்கலாம்!