
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய முப்படைகளும் ஒருங்கிணைந்து நடத்திய தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது குறித்து பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள், தனிப்பட்ட முறையில் தொடர்புடைய தாக்குதலாக உணர்ந்ததாகக் கூறியிருக்கிறார்கள்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது, குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்த இந்துக்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நீங்கள் என்ன மதம் என்று கேட்டு, ஹிந்து என்று சொன்னதும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்தனர். இதில் ஆண்களை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், தங்கள் கண் முன்னே கணவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்த பெண்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகினர்.
இவர்களது கண்ணீருக்கு பதில் சொல்லும் வகையிலும், இவர்கள் இழந்த குங்குமத்துக்கு பதிலடி கொடுக்கும்வகையிலும் நடத்தப்பட்ட இந்த அதிரத் தாக்குதலுக்கு குறியீடாக சிந்தூர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத்தாக்குதலில் பலியான ஷூபம் திவேதியின் மனைவி ஐஷன்யா திவேதி, இந்த தாக்குதல் நடத்திய இந்திய முப்படைகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இந்த தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிடப்பட்டிருப்பதால், தனிப்பட்ட முறையில், தனக்கு ஒரு தொடர்பு இருப்பதாக உணர்வதாகவும், அதிரடித் தாக்குதல் செய்தியை தொலைக்காட்சியில் பார்த்ததுமே, நான் கதறி அழுதேன், இந்த தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிட்டிருப்பது, எங்கள் சார்பாக இந்தியா எடுத்த நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 12ஆம் தேதிதான் ஷுபம் - ஐஷன்யா திருமணம் நடைபெற்ற நிலையில், ஏப்ரல் 22ஆம் தேதி தாக்குதலில் ஷூபம் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதுபோலவே, பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினரும், சிந்தூர் தாக்குதல் நடத்திய மத்திய அரசுடன் ஒட்டுமொத்த நாடும் உறுதுணையாக நிற்கும். பஹல்காம் தாக்குதல் போன்று இனி நடைபெறாத வகையில் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.