
பிகாரிலுள்ள நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியா வர முயன்ற 4 சீனர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா - நேபாள எல்லை வழியாக உரிய ஆவணங்களின்றி வந்த 4 சீனர்கள், ரக்ஸாவுல் சோதனைச் சாவடியில் நேற்று (மே 7) நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், அவர்களுக்கு வழிகாட்டிகளாகச் செயல்பட்ட இரண்டு நேபாளப் பெண்களும் காவலில் எடுக்கப்பட்டனர்.
காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணைக்கு பின் அவர்கள் 2 பேரும் விடுவிக்கப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட 4 சீனர்கள் மீதும் இந்திய வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், நாட்டின் அனைத்து எல்லைகளிலும் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மத்திய அரசுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி, கார்கே பேட்டி