
இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் சௌதி அரேபியாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் அவசரமாக தலைநகர் தில்லிக்கு வந்துள்ளார்.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் “ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்கள் நடத்தியது.
இந்தத் தாக்குதல்களில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் எல்லையிலுள்ள இந்தியப் பகுதிகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால், இருநாடுகளுக்கும் இடையில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சௌதி அரேபியாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் அதெல் அல்-ஜுபெர் அவசரமாக இன்று (மே 8) தில்லி வந்துள்ளார். முன்னறிவிப்பு ஏதுமின்றி மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தில் அவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசியுள்ளார்.
பாகிஸ்தானுடனான தாக்குதல்களைத் தவிர்த்து இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்காண வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக அவர் இந்தியா வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளப் பதிவில், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை சௌதி அமைச்சருடன் பகிர்ந்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி நேற்று (மே 7) இரவு தில்லி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சிந்தூர் தாக்குதல் நடந்த இடம் எப்படியிருக்கிறது? வெளியானது செயற்கைக்கோள் புகைப்படம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.