
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களை முறியடித்த விடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், இந்தியா மீது நேற்றிரவு முதல் பாகிஸ்தான் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகின்றது.
பாகிஸ்தானின் 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இடைமறித்து இந்திய ராணுவம் அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தாக்குதலில் இதுவரை எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், பாகிஸ்தானின் எஃப்-16 உள்பட இரண்டு போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் பகுதிகளில் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டு வருகின்றன.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு ரேடாா்களையும், வான் பாதுகாப்பு அமைப்புகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு தகா்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கராச்சி நகரிலும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும், அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ். விக்ராந்த், பாகிஸ்தானின் கராச்சி நகரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களை முறியடித்த விடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
மேலும், நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது. அனைத்து தீய சக்திகளுக்கும் பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.