
பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் வியாழக்கிழமை (மே 8) இரவிலிருந்து விடிய விடிய தாக்குதல் நடத்தியது.
ராணுவம் மற்றும் விமானப் படையுடன் சேர்ந்து கராச்சி பகுதியில் கடற்படை தாக்குதல் நடத்தியது. இதில், துறைமுகப் பகுதிகள் அழிக்கப்பட்டதாகவும், விமானப் படை தாக்குதலில் லாகூரில் ஐஎஸ்ஐ அமைப்பின் முகாம்கள் தகர்க்கப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லையோரத்தில் தற்காப்பு தாக்குதலிலும், பாகிஸ்தான் மீது தீவிர தாக்குதலிலும் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தானின் 8 ட்ரோன்கள் தகர்ப்பு
ஜம்மு - காஷ்மீர் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வியாழக்கிழமை (மே 8) மாலை ட்ரோன் தாக்குதல் நடத்தினர். இவற்றை நடுவானிலேயே இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. மாலை முதல் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இதுவரை 8 ட்ரோன்களை இந்திய ராணுவம் அழித்துள்ளது.
ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு மீது ஏவுகணைத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. மேலும், ஜேஎஃப்-17 விமானங்கள் தாக்கப்பட்டதை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அனைவரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான் தாக்குதல்
ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு தாக்குதல் நடத்தினர். எல்லையிலுள்ள விடுதி மற்றும் உணவகத்தின் மீது பாகிஸ்தான் ராணும் வீசிய குண்டு விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்களுக்கு பீரங்கிகள் மூலம் ராணுவத்தினர் பதில் தாக்குதல் கொடுத்தனர். இதனால், உரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று ஜம்மு - காஷ்மீரின் நெளஷேரா பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அரை மணிநேரத்துக்கும் மேலாக கடுமையான பீரங்கி தாக்குதல் நடந்தது. இதில், விமானப் படையினர் 2 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர். இதனை ராணுவம் உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தானின் தாக்குதலைத் தொடர்ந்து முதல்வர் உமர் அப்துல்லா, ஜம்மு விரைகிறார். இதேபோன்று முப்படை தலைமை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தவுள்ளார்.