

ஏடிஎம்கள் மூடப்படும், காஷ்மீர் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடைபெற்றது என பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக மக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அடுத்த 2 அல்லது 3 நாள்களுக்கு நாடு முழுவதும் ஏடிஎம்கள் மூடப்படும் என்று சமூக வலைதளங்களில் போலியான தகவல் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது.
பாகிஸ்தானிலிருந்து சைபர் அட்டாக் ஏதேனும் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஏடிஎம்கள் வழக்கம் போல செயல்படும். மக்கள் இதுபோன்ற உறுதியற்ற தகவல்களை வேறு யாருக்கும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
அதுபோல சமூக ஊடகங்களில், காஷ்மீர் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடைபெற்றதாக பரவும் தகவல் போலியானது என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
அது மட்டுமல்லாமல், வரும் நாள்களில் மக்களின் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள், பெருமளவில் பரவக்கூடும். எனவே, மக்கள் ஒவ்வொரு தகவலையும் தெளிவாக ஆராய்ந்து பார்வையிடுவது மிகவும் அவசியம். எந்தவொரு தகவலையும் உண்மை என நம்பி ஏமாற வேண்டாம்.
இந்திய ஆயுதப்படைகள் குறித்தும், தற்போதைய நிலையைப் பற்றியும் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் எதையும் நீங்கள் சந்தித்தால், உடனடியாக பிஐபி ஃபேக்ட்செக்-இல் (PIBFactCheck) இல் புகாரளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புகாரளிக்க வாட்ஸ்ஆப் எண் - +91 8799711259, மின்னஞ்சல் முகவரி factcheck@pib.gov.in என்ற முகவரியிலும் மக்கள் முன்வந்து புகார் அளிக்கலாம் என்று மத்திய அரசின் பிஐபி அறிவுறுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.