சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு(கேஒய்சி) அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கட்டாயமல்ல என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எல்பிஜி சமையல் எரிவாயு நுகர்வோர், தொடர்ந்து சிலிண்டர்களைப் பெற பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த மார்ச் 15 ஆம் தேதி கூறியிருந்தது.
இந்நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சமையல் எரிவாயு நுகர்வோர் அனைவரும் உடனடியாக கேஒய்சி எனும் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்பது போன்ற பல தவறான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
"இந்த ஆன்லைன் கேஒய்சி நடைமுறை புதிதானது அல்ல. நுகர்வோர்கள் தங்கள் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பைச் சரியாக செய்ய வேண்டும் என்பதற்காகவே பதிவிடப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கட்டாயமல்ல , இதுவரை ஒருமுறைகூட தங்களின் ஆதார் விபரங்களைச் சரிபார்க்காத வாடிக்கையாளர்கள் மட்டுமே இதைச் செய்தால் போதும்.
ஏற்கனவே கேஒய்சி சரிபார்ப்பு செய்துள்ள உஜ்வாலா அல்லாத சாதாரண வாடிக்கையாளர்கள் மீண்டும் இதனைச் செய்யத் தேவையில்லை.
உஜ்வாலா திட்டப் பயனாளிகள் மட்டும் மானியம் பெறுவதற்காக நிதியாண்டிற்கு ஒருமுறை இச்சரிபார்ப்பைச் செய்ய வேண்டும். அதுவும் 7 சிலிண்டர்களைப் பெற்ற பிறகு 8 ஆவது அல்லது 9 ஆவது சிலிண்டரைப் பெறும்போது சரிபார்ப்பு கட்டாயம்.
இந்த சரிபார்ப்பு நடைமுறையை வீட்டிலிருந்தே இலவசமாகச் செய்துகொள்ள முடியும். இதனால் சிலிண்டர் விநியோகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.
சமையல் எரிவாயு சிலிண்டரை முறைகேடாக பயன்படுத்துவோரைக் கண்டறியவும் எரிவாயு முறைகேடுகளைத் தவிர்க்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Summary
Govt Clarifies LPG Biometric Aadhaar Authentication Required Only for Unauthenticated Customers
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உஜ்வலா: மானிய எல்பிஜி சிலிண்டா்கள் 4-ஆக குறைப்பு - மத்திய அரசு மீது காங்கிரஸ் சாடல்








