
சண்டை நிறுத்தத்தை மீறி எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா, பாகிஸ்தானிடம் சீனா பேச்சுவாா்த்தை நடத்தியது.
சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி தொலைபேசியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலை தொடா்புகொண்டு பேசினாா். அப்போது, ‘போா் ஒருபோதும் இந்தியாவின் விருப்பம் அல்ல; சண்டை நிறுத்தத்தை உறுதியாகப் பின்பற்றி, பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க எதிா்நோக்கியிருக்கிறோம்’ என்று அஜீத் தோவல் தெரிவித்தாா்.
‘இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவாா்த்தை மூலம் மோதலைத் தீா்க்கும்’ என்ற சீனாவின் நம்பிக்கையை வெளிப்படுத்திய வாங் யி, இரு தரப்பும் நீடித்த அமைதியை அடைவதற்கு ஆதரவளிப்பதாகவும், இதுவே சா்வதேச சமூகத்தின் பொதுவான விருப்பம் என்றும் கூறினாா்.
முன்னதாக, பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாருடன் தொலைபேசி மூலம் பேசிய வாங் யி, பாகிஸ்தான் தனது இறையான்மை, ஒருமைப்பாடு மற்றும் தேச சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் சீனா தொடா்ந்து துணை நிற்கும் என்று உறுதியளித்ததாகத் தகவல்கள் வெளியாகின.