பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணா மாணவர் கைது
இந்தியாவில் உளவு பார்த்து, மிகவும் முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்ததாக, ஹரியாணாவைச் சேர்ந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரத்தில் நடந்திருக்கும் இரண்டாவது கைது சம்பவமாக இது உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் சண்டை ஏற்பட்டு, சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் மிக முக்கிய தகவல்களை உளவுபார்த்து பாகிஸ்தானுக்கு அளித்ததாக, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேவேந்திர சிங் திலோன் என்ற 25 வயது மாணவர், பாட்டியாலாவில் உள்ள கால்சா கல்லூரியில் அரசியல் அறிவியல் படித்து வருகிறார். இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் துப்பாக்கி உள்ளிட்ட புகைப்படங்களை பதிவிட்டதற்காகக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், கர்தார்புர் வழியாக அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் சென்று வந்ததும், பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புக்கு பல்வேறு ரகசிய தகவல்களைப் பரிமாறியதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திலோன், உளவு வேலை செய்வதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பானது அதிகப் பணம் கொடுத்திருப்பதாகவும், இவர் பாட்டியாலா ராணுவ தளத்தின் புகைப்படங்களை பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் துறை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. அவரது வங்கிக் கணக்கும் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதேக் குற்றச்சாட்டுடன் பானிபெட்டில் 24 வயது நௌமான் இலாஹி ஒரு சில நாள்கள் முன்பு கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த வாரம், பஞ்சாப் காவல்துறையினர், ஒரு பெண் உள்பட இரண்டு பேரை பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகக் கூறி கைது செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.