கா்னல் சோஃபியா குரேஷி விவகாரம்: அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது! உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

அமைச்சருக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவை நியமித்தது உச்சநீதிமன்றம்.
கா்னல் சோஃபியா குரேஷி விவகாரம்: அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது! உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
Published on
Updated on
1 min read

கா்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷாவின் மன்னிப்பை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தை விசாரிக்க மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டாா்’ என்று விஜய் ஷா கூறியிருந்தாா்.

இந்த விவகாரம் பெரும் சா்ச்சையான நிலையில் இதுதொடர்பாக தானாக முன்வந்து விசாரித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், அமைச்சர் விஜய் ஷா மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படியே விஜய் ஷா மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தன் மீதான வழக்குப்பதிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் ஷா தொடர்ந்த வழக்கை அவசர வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம், ‘பதற்றமான சூழலில் நாடு இருந்தபோது, மாநில அமைச்சராக இருக்கும் நபா் மிகுந்த பொறுப்புணா்வுடன் வாா்த்தைகளை வெளியிட வேண்டும்’ என்று கண்டனம் தெரிவித்திருந்தது.

இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது மன்னிப்பு கேட்டு அமைச்சர் வெளியிட்ட விடியோவை விமர்சித்த நீதிபதி சூர்ய காந்த், ”நீங்கள் வெளியிட்டது எது மாதிரியான மன்னிப்பு? நான் பேசியது மனதை புன்படுத்தியிருந்தால் எனக் குறிப்பிட்டு மன்னிப்பு விடியோ வெளியிட்டுள்ளார். இதில் உண்மைத்தன்மை இல்லை. வழக்கில் இருந்து தப்பிக்க விடியோ வெளியிட்டுள்ளார்” என கண்டனம் தெரிவித்தார்.

மேலும், நாங்கள் மன்னிப்பை ஏற்கவில்லை, நிராகரிக்கிறோம். எங்களுக்கு மன்னிப்பு தேவையில்லை, வழக்கு நீதிமன்றத்துக்கு வந்ததால் மன்னிப்பு கேட்கிறீர்கள். நீங்கள் அனுபவமிக்க அரசியல்வாதி, வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, நாடே உங்களைக் கண்டு வெட்கப்படுகிறது எனத் தெரிவித்த நீதிபதிகள், காவல்துறை பதிவு செய்த வழக்கை விசாரிக்க மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டனர்.

மூன்று அதிகாரிகளில் ஒருவர் ஐஜி அல்லது டிஜிபி அந்தஸ்து அதிகாரியாக இருக்க வேண்டும், மூவரும் வெளிமாநில அதிகாரிகளாக இருக்க வேண்டும், ஒரு பெண் அதிகாரி இடம்பெற வேண்டும் என்று நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், விசாரணையின் முழு அறிக்கையை சிறப்புக் குழு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வழக்கின் விசாரணையை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

விசாரணை முடியும் வரை அமைச்சரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com