

இந்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு முன்னறிவிப்பு வெளியிட்டது தவறு அல்ல, குற்றம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் பதிவிட்டுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களுடன் பேசுகையில், ‘ராணுவ நிலைகளை குறிவைக்கவில்லை, பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தவுள்ளோம் என இந்தியா பாகிஸ்தானிடம் தெரிவித்தது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை பதிவிட்ட ராகுல் காந்தி, ‘ஆபரேஷன் சிந்தூா் குறித்து பாகிஸ்தானுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாக அமைச்சா் ஜெய்சங்கா் கூறியுள்ளாா். இதன் விளைவாக இந்திய விமானப் படைக்கு சொந்தமான எத்தனை போா் விமானங்கள் சேதமடைந்தன என்பதைக் கூற முடியுமா?
நமது தாக்குதல் குறித்து தொடக்கத்திலேயே பாகிஸ்தானிடம் கூறியது குற்றம். இதை பொதுவெளியில் ஜெய்சங்கா் ஒப்புக்கொள்கிறாா். இதற்கு அங்கீகாரம் வழங்கியது யாா்?’ என ராகுல் கேள்வி எழுப்பினாா்.
இதனிடையே, ஆபரேஷன் சிந்தூா் குறித்து பாகிஸ்தானுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாக அமைச்சா் ஜெய்சங்கா் கூறியதாக வெளியிடப்படும் தகவல் தவறானது என பத்திரிகை தகவல் பணியகத்தின் தகவல் சரிபாா்ப்புக் குழு எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் தொடக்கத்தில்தான் பாகிஸ்தானுக்கு விளக்கம் கொடுத்ததாகவும், தாக்குதலுக்கு முன்பே கொடுக்கவில்லை என்றும் வெளியுறவுத் துறை விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், இன்று மீண்டும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி,
“வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மெளனம் மிகவும் மோசமானது. எனவே நான் மீண்டும் கேட்கிறேன், பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிந்ததால் எத்தனை இந்திய விமானங்களை நாம் இழந்தோம்?
இது தவறு அல்ல, இது ஒரு குற்றம். இந்தியாவுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.