
சென்னை: அரபிக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று முற்பகலில் கரையைக் கடக்கவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில், மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரிக்கு வட மேற்கே 40 கிலோ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக, நாட்டில் 4 மாநிலங்களுக்கு இன்றும் நாளையும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்பதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்துக்குள் தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மாத இறுதி வரை தென்மேற்குப் பருவமழையின் முதல் சுற்று தீவிரமடைந்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு
அரபிக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, பாம்பன் துறைமுகக்ஙளில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை
1 மணி வரை 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாயப்பு உள்ளது. என்றும், கடலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதகை படகு இல்லம்
உதகையில் பலத்த காற்று காரணமாக, உதகை ஏரியில் சுற்றுலா பயணிகள் செல்லும் பெடல் படகு இன்று இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.