சத்தீஸ்கரில் நக்சல் தளபதி சுட்டுக்கொலை! மற்றொருவர் பிடிபட்டார்!
சத்தீஸ்கரின் லதேஹர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், நக்சல் இயக்கத்தின் முக்கிய தலைவரும் தளபதியுமான மணிஷ் யாதவ் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சத்தீஸ்கரில் நக்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்ற சண்டையில் ஒரே நாளில் 27 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பாக கருதப்பட்ட நம்பலா கேசவ் ராவ் (எ) பசவராஜும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று(ஞாயிறு) இரவு முதல் இன்று(திங்கள்) காலை வரை லதேஹர் மாவட்டத்தில் நக்சல்கள் இயங்கும் முக்கிய இடமான டௌனா-கரம்காட் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல் இயக்கத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மிகவும் தேடப்பட்ட நக்ஸல் இயக்கத்தின் முக்கிய தளபதி மணிஷ் யாதவ் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலும் மற்றொரு முக்கிய நக்சல் இயக்கத் தலைவர் குந்தன் கர்வார் என்பவரை போலீசார் பிடித்தனர். எக்ஸ்95 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருவர் மீது பல்வேறு குற்றச் சம்பவங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.