

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள் மனுவைத் திரும்பப் பெற நேற்று மாலையுடன் காலஅவகாசம் நிறைவடைந்தது.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப் பேரவைக்கு நவ.6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. நவம்பா் 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
முதல்கட்ட தோ்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, மனுக்களை திரும்பப் பெறும் அவகாசம் திங்கள்கிழமையுடன் முடிந்தது.
இரண்டாம் கட்டத் தோ்தல் நடைபெறும் 122 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, மனுக்களைத் திரும்பப் பெறும் அவகாசம் வியாழக்கிழமையுடன் முடிந்தது.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி உடன்பாடு சலசலப்புக்கு மத்தியில் சுமுகமாக முடிவடைந்த நிலையில், எதிரணியில் முதல்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு திரும்பப் பெறும் நாளை கடந்தும் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் ஆகிய எதிரணியின் முக்கியக் கட்சிகள் ஒருவரை ஒருவர் எதிர்த்து 14 இடங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
10 தொகுதிகளில் கூட்டணிக்குள் போட்டி
முதல் கட்டத் தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவதை தடுக்க இந்தியா கூட்டணியினர் தவறிவிட்ட நிலையில், பாட்னாவில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் புதன்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, வியாழக்கிழமை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இந்தியா கூட்டணித் தலைவர்கள், தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தனர். ஆனால், கூட்டணிக் கட்சிக்குள் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு திரும்பப் பெற நேற்று மாலையுடன் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், 4 பேர் வாபஸ் பெற்றுள்ளனர்.
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் வேட்பாளருக்கு ஆதரவளித்து வாரிசலிகஞ்ச், பிரான்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும், பாபூபர்ஹி தொகுதியில் விகாஸ்ஷீல் இன்சான் வேட்பாளரும் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றனர்.
இதனால், இந்தியா கூட்டணிக்குள் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடும் தொகுதிகளில் எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது.
ஆனால், ஒரே கூட்டணிக்குள் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவது, அந்த தொகுதிகளில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமான சூழலாக மாறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.