/

நல்லாட்சிக்கான முன்மாதிரி பாஜக: பிரதமர் மோடி

நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லும் ஆட்சிக்கான முன்மாதிரியாக பாஜக உருவாகியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News image
பிரதமர் நரேந்திர மோடி - படம் - எக்ஸ் / நரேந்திர மோடி
Updated On :29 செப்டம்பர் 2025, 3:06 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லும் ஆட்சிக்கான முன்மாதிரியாக பாஜக உருவாகியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தில்லியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தின் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

''பாஜக மாநில அலுவலகத்தை திறக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், பொது சேவைக்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் தொழிலாளர்களின் உற்சாகத்தையும், வைராக்கியத்தையும் கண்டு என் இதயம் பெருமையால் நிறைந்துள்ளது.

பாஜக எப்போதும் தில்லியுடனும் அதன் நலன்களுடனும் இணைந்திருக்கிறது. இன்று, கட்சியின் புதிய மாநில அலுவலகத்திற்குள் நுழைகையில், அமைப்பின் சேவைப் பணிகளில் தொடர்ந்து உத்வேகம் பெற வேண்டும். மேலும் பொது நலனுக்கான உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

நல்ல ஆட்சி வழங்குவதற்கான புதிய மாதிரியை பாஜக உருவாக்கியுள்ளது. மரபு மற்றும் மேம்பாடு என்ற மந்திரத்தைக் கொண்டு முன்னேறி வருகிறோம். நாட்டிற்கும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கும் அதிக முன்னுரிமை அளித்து வருகிறோம். பெரும் மோசடிகளில் இருந்து நாட்டை விடுவித்துள்ளோம். உற்பத்தியை பெருக்கி சாமானிய மக்களின் வருவாயை உயர்த்துவதே அரசின் நோக்கமாக உள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக அரசின் மீது தில்லி மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு பாஜகவுக்கு உள்ளது. இந்தப் புதிய அலுவலகத்தில் இருந்து மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தில்லி மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய தில்லி அரசு நிர்வாகத்துடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது.

தில்லியில் சேரிகளில் வசிப்போருக்கு குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும் நூற்றுக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தில்லியில் நூற்றுக்கும் அதிகமான மின்சாரப் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. யமுனா நதியை சுத்தம் செய்ய இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் நதியை சுற்றியுள்ள மக்களுக்கு தூய்மையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்த முடியும்.

தில்லி அரசும் பாஜக அலுவலகமும் தோளுக்கு தோளாக பணியாற்றினால் வளர்ந்த இந்தியா மற்றும் மேம்படுத்தப்பட்ட தில்லி என்ற இலக்கை விரைவில் அடைய முடியும்'' எனக் குறிப்பிட்டார்.

summary

BJP-led NDA govts have given new model of governance PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.