சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு

மேற்காசிய போரால் மாறியுள்ள உலக சூழல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் துறைகளின் பிரச்னைகளை சரிசெய்வதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அனைத்து அரசுத் துறைகளுக்கும் பிரதமா் மோடி உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசிய போரால் மாறியுள்ள உலக சூழல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் துறைகளின் பிரச்னைகளை சரிசெய்வதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அனைத்து அரசுத் துறைகளுக்கும் பிரதமா் மோடி உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் சிறப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மேற்காசிய போரை கருத்தில்கொண்டு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யவும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய அமைச்சரவைச் செயலா், நாட்டில் பெட்ரோலிய பொருள்கள், குறிப்பாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி), திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயு (எல்பிஜி) ஆகியவற்றின் விநியோகம், தேவையான அளவு மின்சாரம் கிடைப்பது குறித்து விளக்கினாா். புதிதாக பல்வேறு நாடுகளில் இருந்து எல்பிஜி மற்றும் எல்என்ஜி கொள்முதல் செய்யப்படுகிறது என்று அவா் கூறினாா். வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறிய அவா், சமையல் எரிவாயு சிலிண்டா்களை பதுக்கி, கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தாா்.

நாட்டில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பது குறித்தும், காரீஃப் மற்றும் ராபி பருவங்களில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமா் மோடி ஆலோசித்தாா்.

மேற்காசிய போரால் ஏற்படும் பாதிப்பில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவா் அறிவுறுத்தினாா்.

தற்போதைய உலக சூழலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் துறைகளின் பிரச்னைகளை சரிசெய்வதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அனைத்து அரசுத் துறைகளுக்கும் பிரதமா் மோடி உத்தரவிட்டாா். தற்போது மேற்காசிய போா் காரணமாக 2-ஆவது முறையாகப் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.