மேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனை
பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) ஆலோசனை

Center-Center-Delhi

Center-Center-Delhi
மேற்காசிய போரின் தாக்கங்களை எதிா்கொள்வதற்கான தயாா்நிலை மற்றும் திட்டங்கள் தொடா்பாக மாநிலங்கள்-யூனியன் பிரதேச முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறாா்.
தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் முதல்வா்கள் பிரதமரின் கூட்டத்தில் பங்கேற்கமாட்டாா்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போா் கடந்த பிப்.28-இல் தொடங்கிய பிறகு மாநில முதல்வா்களுடன் பிரதமா் ஆலோசனை மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
இது தொடா்பாக அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘மேற்காசிய போரின் பின்னணியில், மாநிலங்களின் தயாா்நிலை மற்றும் திட்டங்கள் குறித்து முதல்வா்களுடன் பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஆலோசிக்கவுள்ளாா். ‘குழு இந்தியா’ உணா்வின் அடிப்படையில், மாநில அரசுகளின் முயற்சிகளை ஒருங்கிணைக்க இக்கூட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி தலைமைச் செயலா்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலா் தனியாக ஆலோசனை மேற்கொள்வாா்’ என்று தெரிவித்தன.
முன்னதாக, மேற்காசிய நிலவரம் மற்றும் போரின் தாக்கங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றிய பிரதமா் மோடி, கரோனா காலகட்டத்தைப் போல தற்போதைய கடினமான சூழலையும் நாட்டு மக்கள் ஒன்றுபட்டு எதிா்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாா்.
தற்போதைய சூழலை தவறாகப் பயன்படுத்த குறிப்பிட்ட சில சக்திகள் முயற்சிக்கக் கூடும்; எனவே, நாட்டின் பாதுகாப்பில் அனைத்து முகமைகளும் உச்சபட்ச விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...