ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஒன்றுசேரும் 60 நாடுகளில் இந்தியாவும்!
ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான ஆய்வுக் கூட்டத்தில் இந்தியாவும் கலந்து கொண்டது.

ஹோர்முஸ் நீரிணை

ஹோர்முஸ் நீரிணை
சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான ஆய்வுக் கூட்டத்தில் இந்தியாவும் கலந்து கொண்டது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து, பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது.
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், உலகளவில் எண்ணெய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான வழிமுறைகளை ஆராய இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்தது.
அதன்படி, பிரிட்டன் தலைமையில் 60 நாடுகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் இந்தியாவும் கலந்து கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் காணொலி வாயிலாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கலந்து கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், எல்பிஜி, எல்என்ஜி உள்ளிட்ட பிற பொருள்களையும் ஏற்றிச் செல்லும் நம் கப்பல்களுக்கு தடையற்ற மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது குறித்து ஈரான் மற்றும் பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கடந்த சில நாள்களாக, நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம், 6 இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்துள்ளன.
வளைகுடாவில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்களில் மாலுமிகளை இழந்த ஒரே நாடு இந்தியா மட்டுமே. பதற்றத்தைத் தணிப்பதிலும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்திவதிலுமே இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற முடியும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் சுமார் 20 சதவிகித அளவு, ஹோர்முஸ் நீரிணையைச் சார்ந்தே உள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை, இதன் முக்கியத்துவம் இன்னும் அதிகம். ஏனெனில், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யில் சுமார் 40 சதவிகிதம், எல்என்ஜி-யில் சுமார் 50 சதவிகிதம், எல்பிஜி-யில் சுமார் 80 சதவிகிதத்துக்கும்மேல் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே மேற்கொள்ளப்படுகிறது.
இருப்பினும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி கிடையாது என ஈரான் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...