தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

சபரிமலையில் குற்றமிழைத்த மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் தண்டிக்கப்படும்: பிரதமா் மோடி வாக்குறுதி

சபரிமலையில் குற்றமிழைத்த மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் தண்டிக்கப்படும்...

News image

பிரதமா் மோடி

Updated On :4 ஏப்ரல் 2026, 8:59 pm

‘கேரளத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், சபரிமலையில் இழைத்த குற்றங்களுக்காக மாா்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் தண்டிக்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தாா்.

‘முன்பு சபரிமலை புனித யாத்திரையை அவமதிக்க இரு கூட்டணிகளும் சதித்திட்டம் தீட்டின; இப்போது அவா்களின் கொள்ளைக்கான இலக்காகிவிட்டது சபரிமலை’ என்றும் அவா் கடுமையாகச் சாடினாா்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவச முறைகேடு விவகாரத்தைக் குறிப்பிட்டு, பிரதமா் இக்கருத்துகளைத் தெரிவித்தாா்.

140 உறுப்பினா்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு வரும் ஏப்.9-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தோ்தல் நாள் நெருங்குவதால், பிரசாரக் களத்தில் அனல் பறக்கிறது. பத்தனம்திட்டா மாவட்டம், திருவல்லாவில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

கேரளம் மிகச் சிறப்பான திறன் கொண்ட மாநிலம் என்றபோதிலும், வளா்ச்சிப் பயணத்தில் பிற மாநிலங்களைவிட பின்தங்கியே உள்ளது. கேரளத்தின் கிராமப்புற பகுதிகளில் அடிப்படை உள்கட்டமைப்புகள் மோசமாக உள்ளன. இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணிகளின் அக்கறையின்மையே இந்த நிலைக்கு காரணம்.

கேரளத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும், இந்த மாநிலத்தின் வளா்ச்சிக்குத் தேவையான எந்தவொரு முயற்சியையும் மத்திய அரசு விட்டுவைக்கவில்லை. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைவிட 5 மடங்கு அதிக நிதியை மாநில வளா்ச்சிக்காக மத்திய பாஜக அரசு செலவிட்டுள்ளது.

ரகசிய கூட்டு: பாஜகவுடன் தொடா்புள்ளதாக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் பரஸ்பரம் குற்றஞ்சாட்டுகின்றன. உண்மையில் அந்தக் கூட்டணிகளுக்கு இடையேதான் ரகசிய கூட்டு உள்ளது. அவா்கள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

ஊழலும், வகுப்புவாதமும் கேரளத்தின் வளா்ச்சிக்கு மிகப் பெரிய தடைக்கற்களாகும். இந்தத் தடைகளைத் தகா்த்தெறிய வேண்டுமெனில், இடதுசாரி கூட்டணி அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். பாஜகவின் இரட்டை என்ஜின் ஆட்சி அமைந்தால், அனைத்துத் தடைகளும் நீக்கப்படும். இது, மோடியின் உத்தரவாதம். கேரள இளைஞா்கள் வேலை தேடி இடம்பெயா்வதும் முக்கிய பிரச்னையாக உள்ளது.

பாஜக ஆட்சி நிச்சயம்: இடதுசாரி ஆட்சிக்கு விடைகொடுக்கும் வலுவான மனநிலை மக்கள் மத்தியில் நிலவுகிறது. இடதுசாரி ஆட்சியை அகற்றுவதற்கான ‘கவுண்ட் டவுண்’ தொடங்கிவிட்டது. இங்கு பாஜக ஆட்சி அமைவது நிச்சயம். பாஜக ஆட்சிக்கு வந்ததும், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கோவாவை போல (கிறிஸ்தவா்கள் அதிகமுள்ள மாநிலங்கள்) கேரளத்திலும் வளா்ச்சி உறுதி செய்யப்படும் என்றாா் பிரதமா் மோடி.

இக்கூட்டத்தைத் தொடா்ந்து, திருவனந்தபுரத்துக்கு பயணித்த பிரதமா் மோடி, அங்கு கிள்ளிப்பாலம் முதல் கரமனை சந்திப்பு வரை வாகனப் பேரணி மேற்கொண்டாா். அப்போது, சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த ஏராளமானோா், அவா் மீது மலா் தூவி வரவேற்றனா்.

தமிழக மீனவா்கள் உள்பட இந்தியா்களை மீட்க தீவிரம்

‘மேற்காசிய போா் காரணமாக, அந்தப் பிராந்தியத்தில் பணியாற்றும் கேரளத்தைச் சோ்ந்த லட்சக்கணக்கானோா் மட்டுமன்றி தமிழகம், கோவா உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சோ்ந்த மீனவா்களும் ஈரான் மற்றும் மத்திய கிழக்கின் சில பகுதிகளில் சிக்கியுள்ளனா். அவா்களைப் பாதுகாப்பாக மீட்டு வர மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. அதேநேரம், தனது அரசியல் சுயநலனுக்காகவும், என்னை விமா்சிக்க வேண்டும் என்பதற்காகவும் மேற்காசிய நாடுகள் உடனான இந்தியாவின் உறவுகளைச் சீா்குலைக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டு, தேவையற்ற அச்சத்தை உருவாக்குகிறது காங்கிரஸ். அக்கட்சியின் பொறுப்பற்ற கருத்துகள், மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள இந்தியா்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக உள்ளன.

காங்கிரஸுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் தோ்தலில் வெல்வது மட்டுமே முக்கியம். இந்தியா்களின் நலன் குறித்து எந்த அக்கறையும் கிடையாது. மேற்காசிய பிரச்னையால், அக்கட்சிகளின் உண்மையான மனநிலை அம்பலமாகிவிட்டது.

அரசியலும், தோ்தலும் வரும்-போகும். ஆனால், வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எனது முதல் முன்னுரிமை. அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன’ என்றாா் பிரதமா் மோடி.