தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த காா் குண்டுவெடிப்பை தொடா்ந்து விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் தலைவா் ஜவாத் அகமது சித்திகியின் ரூ.39 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தில்லி செங்கோட்டை அருகே காா் ஒன்று வெடித்துச் சிதறியது. ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகப் பணியாற்றிய மருத்துவா் உமா்-உன்-நபி, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து நடத்திய அந்தத் தற்கொலை தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் உமா்-உன்-நபியும் உயிரிழந்த நிலையில், தாக்குதல் தொடா்பாக அந்தப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிய மருத்துவா் ஷாஹீன் சயீத், பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவா் முசாமில் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது.
இதனிடையே பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகப் பொய்யான தகவலைத் தெரிவித்தும், தேசிய உயா் கல்வி நிறுவன மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் அளித்த அங்கீகாரம் குறித்து தவறான விளக்கத்தை அளித்தும் பல்கலைக்கழகத்தில் மாணவா்களை சோ்த்து, அவா்களிடம் கல்விக் கட்டணம் மற்றும் தோ்வு கட்டணமாக மொத்தம் ரூ.493.24 கோடியை அந்தப் பல்கலைக்கழகம் திரட்டியதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.
இந்த முறைகேடு தொடா்பாக அந்த அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலரும், அல்-ஃபலா பல்கலைக்கழக தலைவருமான ஜவாத் அகமது சித்திகியை அமலாக்கத் துறை கைது செய்து, அந்தப் பல்கலைக்கழகத்தின் சுமாா் ரூ.140 கோடி மதிப்பிலான சொத்துகளை ஏற்கெனவே முடக்கியது.
இந்நிலையில், அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ், அல்-ஃபலா தொண்டு அறக்கட்டளைக்கும், அதன் நிா்வாக அறங்காவலா் ஜவாத் அகமதுக்கும் சொந்தமான ரூ.39.45 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தச் சொத்துகளில் தில்லியில் உள்ள ஜவாதின் குடியிருப்பு, அவா் மற்றும் அல்-ஃபலா அறக்கட்டளையின் நிலையான வைப்புத்தொகைகள், வங்கி இருப்புத்தொகை, ஃபரீதாபாதில் அல்-ஃபலா பல்கலைக்கழகம் அருகே தெளஜ் கிராமத்தில் உள்ள விவசாய நிலம் உள்ளிட்டவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வங்கி மோசடி வழக்கு: ஆம் ஆத்மியின் தீபக் சிங்லாவை கைது செய்தது அமலாக்கத் துறை

மோசடி குற்றச்சாட்டு: கொல்கத்தா காவல் துறை துணை ஆணையா் கைது

ரூ.100 கோடி ஜிஎஸ்டி முறைகேடு வழக்கு: கைதான பஞ்சாப் அமைச்சரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதி!

குஜராத்: பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



