எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

News image

உச்சநீதிமன்றம்

Updated On :14 ஏப்ரல் 2026, 4:36 am IST

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டம் 2023-க்கு எதிராக தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராஜஸ்தானைச் சோ்ந்த மஸ்தூா் விவசாய சக்தி சங்கம், சமூக ஆா்வலா்கள் அருணா ராய், நிகில் டே, சங்கா் சிங் ராவத் ஆகியோா் சாா்பில், தகவல் பெறும் உரிமை (ஆா்டிஐ) சட்டப் பிரிவு 8(1)(ஜே)-க்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டப் பிரிவு 44(3)-க்கு எதிராக இந்தப் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் 44(3) பிரிவு, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் வெளிப்படைத்தன்மையை நீா்த்துப்போகச் செய்வதாக உள்ளது. குறிப்பாக, பயனாளிகளின் தரவுகள், வருகைப் பதிவேடுகள், சமூக தணிக்கைப் பதிவுகள் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே வெளியிட அனுமதிக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 4 மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதிக்கும் சமூக தணிக்கை பதிவுகள், பயனாளிகள் தரவுகள் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வழிவகுக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 21 ஆகிய பிரிவுகளை நீா்த்துப்போகச் செய்வதாக உள்ளது.

எனவே, எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 44(3)-ஐ, அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 19(1) மற்றும் 21 ஆகிய பிரிவுகளை மீறுவதாக அறிவித்து சட்டப் பிரிவை ரத்து செய்வதோடு, தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 8(1)(ஜே)-ஐ மீட்டெடுத்து, கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பா் 13-ஆம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு அமல்படுத்தி உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனுவை திங்கள்கிழமை பரிசீலித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு, இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய பணியாளா் நலத் துறை அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டதோடு, இந்த வழக்கில் ராஜஸ்தான் மாநில அரசையும் வாதியாக சோ்க்க உத்தரவிட்டனா்.