/

ஊதிய உயர்வு போதவில்லை; உ.பி.யில் தொடரும் போராட்டம்!

உத்தரப் பிரதேசத்தில் தொழிலாளர்கள் போராட்டம் நடைபெறுவது பற்றி...

News image

நொய்டாவில் நடைபெறும் போராட்டம் - EPS

Updated On :14 ஏப்ரல் 2026, 9:19 am

உ.பி.யில் ஊதிய உயர்வுக்காக நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து அரசு 21% ஊதியத்தை உயர்த்தி வழங்குவதாகக் கூறிய நிலையில் அது போதாது எனக் கூறி மீண்டும் போராட்டம் நடைபெறுகிறது.

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் உ.பி. அரசு 21% ஊதிய உயர்வு வழங்க ஒப்புதல் அளித்தது.

ஆனால், தாங்கள் கேட்டதை விட குறைந்த அளவிலேயே ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொர்ந்து வருகின்றனர்.

நொய்டா - காசியாபாத் பகுதிகளில் தொடரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் காவல்துறை மீது கற்களை வீசியுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போராட்டம் நேற்று தீவிரமடைந்து காவல்துறையினருக்கும் தொழிலாளர்களுக்கும் மோதல் வெடித்தது. இதில், 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு தொழிலாளர் பிரதிநிதிகள், தொழில் அமைப்புகள் மற்றும் பிற தரப்பினருடன் ஊதிய உயர்வு தொடர்பான குறைகளைக் களைய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

எனவே, தொழிலாளர்கள் தங்களின் வேலைக்குத் திரும்பி மாவட்டத்தில் அமைதியைப் பேண ஒத்துழைக்குமாறும் கௌதம் புத்தா நகர் காவல் ஆணையர் லட்சுமி சிங் கூறினார்.

தொழிலாளர்களைத் திரட்ட வாட்ஸப் குழுக்கள் பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டிய காவல்துறையினர் இது ஏதேனும் குழுக்களின் திட்டமிட்ட சதியாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் எதிர்க்கட்சிகளின் சதி என்றும் இது மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்க அவர்களின் திட்டம் என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுபற்றிப் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ”பொய் சொல்வதில் உ.பி. அரசு முதலிடத்தில் உள்ளது. இது ஒரு சதி என்று முதல்வர் கூறுகிறார். இதை சதி என்று கூறுவதன் மூலம், அவர்கள் தங்கள் சொந்தத் தோல்விகளை மறைக்கப் பார்க்கிறார்கள். தற்போதுள்ள பணவீக்கம் காரணமாக தொழிலாளர்கள் கோரிக்கை வைப்பது இயல்பானதே. தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்பே குழு அமைத்திருக்கலாம்" என்று கூறினார்.

Summary

Noida unrest continues despite wage hike; police deployed, stone-pelting reported

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.