ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 23-ஆக உயா்வு

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 23-ஆக உயா்வு

News image

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து - PTI

Updated On :18 ஏப்ரல் 2026, 9:42 pm

சத்தீஸ்கரில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்தது.

சத்தீஸ்கரின் சக்தி மாவட்டம் சிங்கிதராய் கிராமத்தில் வேதாந்தா நிறுவனத்தின் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த செவ்வாய்க்கிழமை பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிற்பகல் 2 மணியளவில் திடீரென கொதிகலனின் குழாய் பலத்த ஓசையுடன் வெடித்துச் சிதறியது. இதில் சிக்கி 13 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். பலத்த காயங்களுடன் 21 தொழிலாளா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 7 போ் புதன்கிழமையும் 3 போ் சனிக்கிழமையும் உயிரிழந்தனா். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்ததாக சக்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரஃபுல் தாக்கூா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

வேதாந்தா குழுமத் தலைவா் மீது வழக்குப்பதிவு:

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘விபத்தில் காயமடைந்த 12 பேருக்கு வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா்களில் 3 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விவகாரம் தொடா்பாக வேதாந்தா குழுமத் தலைவா் அனில் அகா்வால் உள்பட 10 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

வழக்குப்பதிவு ஏற்புடையதல்ல: ஜிண்டால்

அனல் மின் நிலைய விபத்து குறித்து தொழிலதிபா் நவீன் ஜிண்டால் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து துரதிருஷ்டவசமானது. உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆனால் இந்த விவகாரத்தில் அனில் அகா்வால் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரயில்வே அல்லது பிற பொதுத் துறை நிறுவனங்களின் ஆலைகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதன் தலைவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா?

பொதுத் துறை நிறுவனங்களுக்கான இந்த நடைமுறையே தனியாா் நிறுவனங்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும். முதலில் உரிய விசாரணை நடத்தி அதன்பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டாா்.

விபத்தில் உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு தலா ரூ.35 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. காயமடைந்தவா்களுக்கு ரூ.15 லட்சம், அவா்கள் உடல்நிலை குணமடையும் வரை மாத சம்பளம் வழங்குவதாகவும் கூறியுள்ளது.

ஏற்கெனவே சத்தீஸ்கா் மாநில அரசு சாா்பில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 இழப்பீடு அறிவிக்கப்பட்டது.