
தெலங்கானா முதல்வர் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு! நாடு திரும்புகிறார்!
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது குறித்து...

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி - Center-Center-Hyderabad
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அமெரிக்காவுக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவின் காங்கிரஸ் தலைமையிலான அரசின் முதல்வரான ரேவந்த் ரெட்டி, 10 நாள்கள் அரசு முறைப் பயணமாக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்குச் செல்வதற்காக நேற்று (ஆக. 20) தில்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் சென்றடைந்தார்.
இதையடுத்து, லண்டன் நகரத்தில் இருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்துக்குச் செல்ல திட்டமிட்டிருந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி வரும் ஆக. 30 ஆம் தேதி நாடு திரும்புவார் எனக் கூறப்பட்டிருந்தது.
முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பிரிட்டன் மற்றும் அமெரிக்க பயணங்களுக்கு முறைப்படி மத்திய அரசிடம் அனுமதி கோரியதாகவும்; ஆனால், பிரிட்டன் பயணத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லண்டனில் இருக்கும் முதல்வர் ரேவந்த் ரெட்டி அங்கிருந்து அமெரிக்காவுக்குச் செல்ல மத்திய வெளியுறவு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. மேலும், ரேவந்த் ரெட்டி தலைமையிலான “ரைசிங் தெலங்கானா” குழுவினர் பிரிட்டன் சென்ற பிறகே அமெரிக்க பயணத்துக்கு அரசியல் கோணங்களின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, தெலங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட், கேம்பிரிஜ் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸ், லண்டன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி செல்வதாகவும், உலகின் தலைச்சிறந்த கல்வி நிறுவனங்களை ஹைதராபாத் நகரத்துக்குக் கொண்டு வரும் முயற்சியாக இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகம், ஹார்வார்டு பல்கலைக்கழகம் மற்றும் எம்ஐடி உள்ளிட்ட முக்கிய கல்வி நிறுவனங்களுக்குச் செல்லவும், நியூயார்க்கில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் உறுப்பினர்களையும் சந்திக்கவும் முதல்வர் ரேவந்த் ரெட்டி திட்டமிட்டிருந்தார்.
ஆனால், மத்திய அரசின் முடிவை ஏற்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது பிரிட்டன் பயணத்தை மட்டும் நிறைவு செய்துவிட்டு வரும் ஆக. 23 ஆம் தேதி ஹைதராபாத் திரும்புவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, இந்தப் பயணத்தால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னை அருகே கோவளத்தில் நேற்று நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Central Government has denied permission for Telangana CM Revanth Reddy to visit the United States.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






