
மோடி, வாஜ்பாய் 'வந்தே மாதரம்' பாடலின் முழு வடிவத்தையும் பாடினார்களா? - கபில் சிபல் கேள்வி
மோடி, வாஜ்பாய் 'வந்தே மாதரம்' பாடலின் முழு வடிவத்தையும் பாடினார்களா? என கபில் சிபல் கேள்வி எழுப்பியிருப்பது குறித்து...
மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் - கோப்புப்படம்
புது தில்லி: 'வந்தே மாதரம்'பாடலின் முதல் இரு சரணங்களைமட்டுமே தங்களது கட்சி நிகழ்ச்சிகளில் பாடுவது என்ற காங்கிரஸின் முடிவு தேச விரோதம் என்று விமர்சித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அல்லது பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் அந்த பாடலின் முழு வடிவத்தையும் பாடினார்களா?, பாடலின் முழு வடிவத்தைப் பாடாத பாஜக தலைவர்களும் 'தேசவிரோதிகள்'தானா? என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் வந்தே மாதரம் பாடலை முழுவதும் பாடாமல் இரு சரணங்கள் மட்டுமே, காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளில் பாடுவதென்று முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது:
வந்தே மாதரம் பாடலை முழுவதும் பாடாமல் இரு பத்திகளை மட்டுமே பாடுவதென்று காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு தேச விரோதம். அதேபோல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை வெளிப்படையாக எதிா்க்கும் செயலாகும். 1937-ஆம் ஆண்டில் ஒருசாராரை திருப்திப்படுத்த, வந்தே மாதரம் பாடலின் இரு சரணங்களை மட்டுமே காங்கிரஸ் பாடியது. அன்று முதல் இரு நாடுகள் என்ற யோசனை வலுப்பெறத் தொடங்கியது. அது நாட்டின் பிரிவினைக்கு வழிவகுத்தது.
வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு தினத்தில் அந்த வரலாற்றுத் தவறை மோடி அரசு சரி செய்தது. ஆனால், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி, வாக்கு வங்கி அரசியலுக்காக மீண்டும் திருப்திப்படுத்தும் அரசியலை நோக்கிய பாதையில் செல்கிறது. ஏற்கெனவே காங்கிரஸ் செய்த தவறால் நாடு பெரிய விளைவுகளைச் சந்தித்தது. ஆதலால் நாட்டு மக்கள் அனைவரும் காங்கிரஸின் திருப்திப்படுத்தும் கொள்கைக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாஜக தலைவர்களை 'போலித் தேசியவாதிகள்' என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்தார்.
காங்கிரஸின் முடிவை நியாயப்படுத்திய ரமேஷ், தேசிய அளவிலான கூட்டங்களில் 'வந்தே மாதரம்' பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாட வேண்டும் என்று 1937-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சுதந்திரப் போராட்டத்தின் பல முக்கியத் தலைவர்களின் ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் எடுக்கப்பட்ட முடிவாகும் என்று கூறினார்.
இந்த நிலையில், குஜராத் முதல்வராக நரேந்திர மோடியோ அல்லது பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாயியோ அந்த பாடலின் முழு வடிவத்தையும் பாடினார்களா?, பாடலின் முழு வடிவத்தைப் பாடாத பாஜக தலைவர்களும் 'தேசவிரோதிகள்'தானா என்று அமித் ஷாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதவில்,
வந்தே மாதரம் பாடலின் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவது என்ற காங்கிரஸ் செயற்குழுவின் முடிவை அமித் ஷா 'தேச விரோதம்' என்று விமர்சித்துள்ளார். எனது கேள்வி என்னவென்றால், 1950-க்குப் பிறகு நடைபெற்ற தனியார் அல்லது அரசு நிகழ்ச்சிகளில் பாஜகவினர் அனைத்து சரணங்களையும் பாடியுள்ளார்களா?, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி பாடினாரா? பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் பாடினாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்படியானால் பாடலின் முழு வடிவத்தைப் பாடாத பாஜக தலைவர்களும் 'தேச விரோதிகள்'தானா? என கேள்வி எழுப்பிய சிபில், இதன் மூலம் உங்களது வாக்கு வங்கி அரசியல் தெளிவாக வெளிப்படுகிறது! என்று சிபல் கூறியுள்ளார்.
Summary
Kapil Sibal asks Shah if Modi as CM, Vajpayee as PM sang full version of Vande Mataram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






