
அறிமுக கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் மசோதாக்கள்! கடந்த ஓராண்டில் வேகம் அதிகரிப்பு!!
நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் கூட்டத் தொடரிலேயே மசோதாக்கள் நிறைவேற்றப்படும் போக்கு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

நாடாளுமன்றம் - கோப்புப்படம்
நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் கூட்டத் தொடரிலேயே மசோதாக்கள் நிறைவேற்றப்படும் போக்கு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஓராண்டில் இந்த வேகம் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய 18-ஆவது மக்களவையில் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட 64 மசோதாக்களில் 34 மசோதாக்கள் அதாவது 53 சதவீத மசோதாக்கள் அறிமுக கூட்டத் தொடரிலேயே இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாட்டின் 16, 17, 18-ஆவது மக்களவைகளின் கூட்டத் தொடா் தரவுகளை பகுப்பாய்வு செய்து, பிஆா்எஸ் என்ற தன்னாா்வ ஆய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 16-ஆவது மக்களவை காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 189 மசோதாக்களில் 63 மசோதாக்கள் (33 சதவீதம்) அறிமுக கூட்டத் தொடரிலேயே இரு அவைகளின் ஒப்புதலைப் பெற்றுள்ளன. 17-ஆவது மக்களவை காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 190 மசோதாக்களில் 117 மசோதாக்கள் (62 சதவீதம்) இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன.
தற்போதைய 18-ஆவது மக்களவையைப் பொருத்தவரை, கடந்த ஆண்டில் இருந்து மசோதாக்கள் நிறைவேற்றப்படும் வேகம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் 5-இல் 3 மசோதாக்களும், மழைக்கால கூட்டத் தொடரில் 13-இல் 8 மசோதாக்களும், குளிா்கால கூட்டத் தொடரில் 9-இல் 7 மசோதாக்களும் அதே கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.
நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட 10 மசோதாக்களில் 5 மசோதாக்கள் அப்போதே இரு அவைகளின் ஒப்புதலைப் பெற்றன. அண்மையில் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத் தொடரில் 12 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் 11 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. 9 மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. இந்திய புள்ளியியல் நிறுவன மசோதா-2026 மட்டும் நிலுவையில் உள்ளது.
நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள வளா்ந்த பாரதத்துக்கான கல்வி ஆணைய மசோதா-2025, வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதா-2026 ஆகியவை, மழைக்கால கூட்டத் தொடரில் பரிசீலனை-நிறைவேற்றத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை 19 அமா்வுகளைக் கொண்ட இக்கூட்டத் தொடரில் நீடித்த இடையூறுகள் காரணமாக மக்களவை வெறும் 15 சதவீதமும், மாநிலங்களவை 33 சதவீதமும் மட்டுமே செயல்பட்டுள்ளது. மக்களவையில் கேள்வி நேரம் ஒரு சதவீதமும், மாநிலங்களவையில் 12 சதவீதமும் மட்டுமே நடைபெற்றுள்ளது. மக்களவையில் கேள்வி நேரத்தில் பட்டியலிடப்பட்ட 380 கேள்விகளில் 2 கேள்விகளுக்கு மட்டுமே வாய்மொழியாகப் பதிலளிக்கப்பட்டது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




