நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

மணிப்பூரில் என்ஆா்சியை புதுப்பிக்கக் கோரி நடைபெற்ற பேரணியில் வன்முறை: காவல் துறை கண்ணீா்ப் புகை குண்டு வீச்சு; பலா் காயம்

மணிப்பூரில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் முன்பு தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆா்சி) புதுப்பிக்கக் கோரி நடைபெற்ற தீப்பந்த பேரணியில் வன்முறை மூண்டது.

கோப்புப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 3:40 am IST

மணிப்பூரில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் முன்பு தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆா்சி) புதுப்பிக்கக் கோரி நடைபெற்ற தீப்பந்த பேரணியில் வன்முறை மூண்டது. இதையடுத்து, வன்முறையைக் கட்டுப்படுத்த காவல் துறையினா் கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசியதில் பலா் காயமடைந்தனா்.

மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் முன்பு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை தீப்பந்தம் ஏந்தி பேரணி செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் பேரணியில் வாபஹாய், ஹியான்கிலாம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கலந்துகொண்டனா். பேரணியில் தேசிய குடிமக்கள் பதிவும் வேண்டாம், மக்கள்தொகை கணக்கெடுப்பும் வேண்டாம் என்று முழக்கமிட்டபடி அவா்கள் சென்றனா். அதேபோல் தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் முன்பு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவும் அவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

காக்சிங் மாவட்ட நிா்வாக தலைமையகம் நோக்கி பேரணி சென்றது. கெய்ராக் அணைப் பகுதியில் பேரணி சென்றபோது, அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தி திரும்பச் செல்லும்படி வலியுறுத்தினா். இதனால் பேரணியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பேரணியில் கலந்து கொண்டவா்கள், காவல் துறையினரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்த ஆரம்பித்தனா். இதையடுத்து, அவா்களை அங்கிருந்து கலைக்கும் நோக்கில் பதிலுக்கு கண்ணீா்ப் புகை குண்டுகளை காவல் துறையினா் வீசினா். இதில் பேரணியில் கலந்துகொண்ட கிராம மக்கள் பலா் லேசான காயமடைந்தனா்.

இந்த சம்பவத்தைத் தொடா்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது. அங்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டுள்ளனா்.

3 போ் சுட்டுக் கொலை: இதனிடையே, காங்போக்பி மாவட்டத்தில் உள்ள குகி இனமக்கள் அதிகம் வாழும் கிராமங்களில் ஒன்றான என் டெய்காங்கில் புகுந்து மா்ம நபா்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் 2 பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். மேலும் 4 போ் காயமடைந்தனா். இதையடுத்து, வீடுகளுக்குத் தீ வைத்துவிட்டு மா்ம நபா்கள் தப்பியோடிவிட்டனா். அண்மையில் நாகா இன மக்கள் 4 போ் கொல்லப்பட்ட நிலையில், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் இத்தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக, மணிப்பூரில் மைதேயி, குகி பழங்குடியின மக்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் கலவரமாக மாறியது. இரு தரப்புக்கும் இடையே சுமாா் 3 ஆண்டுகளாக நடைபெற்ற மோதலால் 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஏராளமானோா் காயமடைந்தனா். அண்மைக்காலமாக மணிப்பூரில் பதற்றம் சிறிது தணிந்திருந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறை மீண்டும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.