

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்திருந்த மகாத்மா காந்தியின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது. இதற்கு, இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
மெல்போர்ன் நகரின் ரோவில்லே பகுதியில் உள்ள ஆஸ்திரேலிய இந்திய சமூக மையத்தில் அமைந்திருந்த மகாத்மா காந்தியின் சிலையை, கடந்த ஜன.12 அன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உடைத்து திருடிச் சென்றுள்ளதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சுமார் 420 கிலோ எடையுள்ள இந்தச் சிலையின் கால்பகுதி வரை மர்ம நபர்கள் வெட்டிச் சென்றது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாத்மா காந்தியின் சிலை சேதமாக்கப்பட்டு திருடப்பட்டதற்கு நேற்று (பிப். 3) கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அரசு, இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதுபற்றி, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
”மெல்போர்னில் மகாத்மா காந்தியின் சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் உடைத்து திருடப்பட்டதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கின்றோம். இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் நாங்கள் கேள்வி எழுப்பியுள்ளோம். மேலும், மாயமான சிலையைக் கண்டுபிடிக்கவும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சிலால் கடந்த 2021 ஆம் ஆண்டு பரிசளிக்கப்பட்ட இந்தச் சிலையை முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் திறந்துவைத்தார். மேலும், திறக்கப்பட்ட சில மணிநேரங்களில் இந்தச் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்த முயன்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.